பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 வல்லிக்கண்ணன் கதைகள்

'வா' என்றுகூட சொல்லத் தோன்றாமல், ‘'என்னம்மா, நீ மட்டும்தான் வந்திருக்கியா? மாப்பிள்ளை வரலியா?' என்று விசாரித்தார் அவர். விலகி நின்று மகளுக்கு வழிவிட்டார்.

அம்மா பர்வதமும் அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள். மகளின் தோற்றமே அந்தத் தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது, நெஞ்சில் பெரும் சுமையை ஏற்றி வைத்தது.

“என்ன கமலம், இப்படி ஆயிட்டே! ஆளை அடையாளமே தெரியலியே. மெலிஞ்ச கறுத்து..." எனறு தாய் அங்கலாய்த்தாள்.

மகள் அவள் மீது சாய்ந்து, தோளில் முகம் புதைத்து விம்மினாள். -

என்னவோ, ஏதோ என்று பதறினர் பெற்றோர். அவளைத் தேற்றி, நல்லது கூறி மெதுமெதுவாக விசாரித்தார்கள்.

அவள் சொன்ன ஆறுமாதத்துக் கதையே ஒரு மகாபாரதமாக இருந்தது...

சந்திரசேகரன் நல்லபடியாக இல்லை. குடிக்கிறான். பணம் வைத்துச் சூதாடுகிறான். கமலத்தின் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் அடகு வைத்து, சூதாடி பணத்தைத் தோற்று விட்டான். இப்போது கைவளையல்களைப் பிடுங்க வந்தான். அவள் கொடுக்க மறுத்தபோது, விறகுக்கட்டையால் அடித்தான். வளையல்களை முரட்டுத்தன்மாகப் பிடுங்கிக் கொண்டு போனான்... -

கமலத்தின் கைகள் வீங்கியிருந்தன. வலியிருந்தது. முதுகிலும் அடி விழுந்த தழும்புகள்...

அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. மாமியாருக்குப் பொறுக்கவில்லை. 'துடைகாலி, துப்புக் கெட்ட மூதேவி, விடியாமூஞ்சி, தரித்திரப்பீடை, சனிப்பாடை, நீ அடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த வீட்டிலும் மூதேவி புகுந்துவிட்டது. என் மகனும் களை இழந்து, அழகு குலைஞ்சு, சீக்காளியாகி, சந்தோஷமே இல்லாமல் ஆகிப்போனான்’ என்றெல்லாம் ஏசலானாள். காசு வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்தபோது, போலீசார் வந்து சந்திரசேகரனையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். மாமியார்க்காரி பத்திரகாளி ஆகிவிட்டாள்: 'சூன்யம் புடிச்ச மூதி; சவம், நீ அழுது அழுதுதான் இந்த விட்டிலே இருள் மண்டிப் போச்சு... நீ உங்க வீட்டுக்குப் போ’ என்று ஏசி, கமலத்தைத் துரத்தி விட்டாள்.

- மகள் சொன்னதைக் கேட்டதும் சிவசிதம்பரம் துயரப் பெருமூச்சு உயிர்த்தார். அவரால் வேறு என்ன செய்ய இயலும்?