பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 வல்லிக்கண்ணன் கதைகள்

வெட்க உணர்வு பிடித்தது. அவர்கள் முகத்தில் வி நாணினான்.

அதிகாலை முகூர்த்தத்துக்காக அவன் அங்கே காத்திருக்கத் துணியவில்லை. காலையில் கண் விழித்ததும், அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் தேடியவர்கள் காத்தமுத்துவைக் காணாது திகைத்தார்கள். அவன் எவரிடமும் - கூறிக்கொள்ளாது, எந்நேரத்தில் விழித்தெழுந்து, அவ்வூரை விட்டு வெளியேறினான் என்பது அவர்களில் யாருக்கும் தெரியவில்லை.


(இளந்தமிழன், 1988)


காதலுக்குத் தேவை


சித்ரா! என் கனவில் ஒளி வீசும் நினைவே! நினைவில் சிரிக்கும் கனவே! விழிகளுக்கு விருந்தாக விளங்கிய அழகே! உள்ளத்தில் சதா இனிக்கும் அமுதே! என் அன்பே...

எழுதுவதை நிறுத்திவிட்டு நம்பி ராஜன் எண்ணம் சென்ற போக்கில் லயித்தான்.

'சித்ராவைப்பார்த்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவள் ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லை. வருவாள், அவசியம் வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாறுவதில் என் மனம் இன்னும் அலுப்பு அடையவில்லை. இனிமேல் அவள் இங்கே வராவிட்டாலும் பரவாயில்லை. நாளை நானே அவளைக் காண அவள் வீடு தேடிச் செல்ல முடியுமே!’

இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் உவகைக் கிளுகிளுப்பு உண்டாக்கியது. அவளைப் பார்த்தால்...

அவன் கைவிரல்கள் அவன் முன்னே கிடந்த நோட்டில் சில தாள்களைப் புரட்டின. அவன் எழுதி வைத்திருந்த வரிகள் இப்போதும் அவனுக்கு இனித்தன. -

"அசைந்து வரும் அழகே! மயக்கம் போல் என் அகம் புகுந்து விட்ட சுந்தரி! என் அருமைச் சித்ரா. உள்ளத்தில் உணர்ச்சிப் புயலைக் கிளப்பும் நீ தென்றலென வருகிறாய். அழகு மலர்த்தோட்டம் என விளங்கும் நீ, அடி எடுத்து வருகையில் மலர்களிடையே சஞ்சரிக்கும் வண்ணப்பூச்சி போலும் காட்சி தருகிறாய். உன் மீது பதித்த கண்களை மீட்க முடிவதில்லை.