பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கதைகளைப் பற்றி...

சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்று சொல்லப்படுவது உண்டு. அகண்ட வாழ்வின் ஏதோ ஒரு பகுதியைக் கண்டு புரிந்து கொள்ள உதவுகிற சன்னல் அது.

வாழ்க்கை மிகப் பரந்தது. ஆழமானது. விதம் விதமான அம்சங்களைக் கொண்டது. புதிரானது. சிக்கல்கள் மிகுந்தது. துன்பங்களும் சந்தோஷங்களும் நிறைந்தது. மனிதர்களை பலப்பல விதங்களில் பாதிப்பது. வேடிக்கையானது. ரசங்கள் மிக்கது. ஆகவே, சுவாரசியமானது.

வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற மனிதர்களும் சுவாரசியமானவர்கள். விதம் விதமான இயல்புகளும் போக்குகளும் உடையவர்கள். உணர்ச்சிகளால் இயங்குகிறவர்கள்.

உணர்ச்சிகள் பலப்பல. ஒவ்வொரு உணர்ச்சியும் எல்லோரையும் ஒரே மாதிரித்தான் பாதிக்க வேண்டும் என்பதில்லை. ஒரே உணர்வு ஒரு மனிதனை எல்லா நேரங்களிலும் ஒரே ரீதியில் தான் பாதிக்கும் என்பதும் இல்லை.

அதே போல வாழ்க்கையின் நிகழ்வுகளும் மனிதரைப் பல விதங்களில் பாதிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் ஒருவரை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன. அவரவர்களுடைய, குறிப்பிட்ட நேரத்திய, மனநிலை சூழ்நிலை பக்கத் துணை முதலிய பலவற்றைச் சார்ந்து அமையக் கூடிய விஷயம் அது.

இப்படி எல்லாம் இருப்பதனால் வாழ்க்கையை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போருக்கு வாழ்க்கை ஒரு நாடகமாகவும், ரசிக்க வேண்டிய விளையாட்டாகவும் தோன்றுகிறது.

நான் வாழ்க்கைச் சுழல்களில் - அனுபவச் சிக்கல்களில் - ஆழ்ந்து விடாது, வாழ்வின் ஒரு ஓரத்தில் நின்று வாழ்க்கையையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்து வருகிறேன். அவை எழுப்புகிற என் மன அலைகளையும் எண்ண ஓட்டங்களையும் சுவையாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன். அத்தகைய முயற்சிகள் சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் வடிவெடுத்திருக்கின்றன.