பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 வல்லிக்கண்ணன் கதைகள்

மணிக்கே சைக்கிளில் போக வேண்டும். சாயங்காலம் திரும்பி வருவான். வந்ததும் தோட்ட வேலை அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு பொழுது போக்குவான்.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குப் பிடிக்கவில்லை. 'இது என்ன வேலை! டவுனில் ஒரு ஜவுளிக் கடையில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறிவிடலாம். நல்லாடீசன்ட்டா வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நாகரிகமா இருக்கலாம். பொழுதுபோக்காக சினிமாக்கள் பார்க்கலாம் என்று அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். புருசனிடமும் சொன்னாள். பிறத்தியாரிடமும் புலம்பினாள்.

அவள் பேச்சை அவன் சட்டை செய்யத் தயாராக இல்லை. இது பெரும் மனக்குறையாக இருந்தது அவளுக்கு.

ரஞ்சிதத்துக்கு தான் ரொம்ப அழகானவள் என்ற பெருமை. அவள் பிரமாத அழகி இல்லை. ஆனாலும் இருக்கிற அழகு அம்சங்களை அலங்காரமாக, எடுப்பாகக் காட்டி, வசீகரமாக விளங்கக் கூடிய திறமையில் அவள் தேர்ந்திருந்தாள். தான் ரொம்பவும் புத்திசாலி என்ற கர்வமும் அவளுக்கு இருந்தது.

‘எங்க வீட்டுக்கு எதிர்வீட்டிலே ஒரு ஸார்வாள் இருந்தாக. ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு சினிமாவிலே உனக்கு சான்சு கிடைக்கும்; நீ சீக்கிரமே ஸ்டாரு ஆகிவிட முடியும்னு அடிக்கடி சொல்லுவாக. நீ மட்டும் எட்டாவதோடு படிப்பை நிறுத்தாமல், மேல் கொண்டு படிச்சிருந்தால், உனக்கு இருக்கிற அறிவுக்கு, உனக்கு நல்ல வேலை எத்தனையோ கிடைக்கும். டீச்சராக வரலாம். அல்லது வேறு ஆபீஸ்களிலே வேலை தேடிக் கொள்ளலாம் என்பாக. ஊம்ம் என் விதி, நான் இந்தப் பாடாவதிப் பட்டிக்காட்டு ஊரிலே வந்து, இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்திருக்கு!'

இதுவும் ரஞ்சிதத்தின் புலப்பம் தான். தனிமொழியாகத் தன்னுள் 'பலநூறு தடவை' புலம்பியிருப்பாள் இதை. அவ்வப் போது உரத்த சிந்தனையாகவும் இது வெளிப்பட்டு விடும்.

குப்புசாமி சிடுசிடுப்பான். 'உனக்கு இங்கே என்ன குறைச்சல்? இந்த ஊருக்கு என்ன குறை? அமைதி நிறைந்த அழகான ஊரு. வசதியான வீடு. டவுனிலே நெருக்கடியும் கும்பலும் பரபரப்பும் தான் மிகுதி' என்பான்.

அவன் மனப்போக்கு அவளுக்குப் பிடித்ததாக இருக்கவில்லை. பேன்ட் மற்றும் ஸ்டைலான ஷர்ட் அணிந்து, விலை