பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோழி நல்ல தோழிதான்!

'ந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!’ என்று சொல்லி, வளைகள் கலகலக்கும் படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா. -

'என்னத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?' என்று சிடு சிடுத்தாள் தங்கம்.

அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. எள்ளுக்குள்ளே எண்ணெய் கலந்திருக்கிறது. உன் மனசுக்குள்ளே காதல் புகுந்திருக்கிறது. இதை எல்லாம் தான்.'

தங்கம் பதில் பேசவில்லை. தோழியின் விழிகளைச் சந்திக்க மறுத்த அவளுடைய அஞ்சனம் தோய்ந்த கண்களும், செம்மை படர்ந்த முகமும், தலை தாழ்ந்து கொண்ட நிலையும் 'ராஜம்மா பொய் சொல்லவில்லை' என்று விளம்பரப்படுத்தின.

'என் அருமைத் தங்கம்! டாக்டரிடமும் தோழியிடமும் உள்ளதை உள்ளபடி சொல்லி விட வேண்டும், தெரியுமா? மனசில் உள்ளதை வெளிப்படையாகச் சொன்னால்தான் நன்மை பிறக்க வழி ஏற்படும். அதனாலே, என்னிடம் சொல்வாய் தோழி - உன் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ? என்ன பேரோ? எந்தத் தெருவோ?’ என்று நீட்டி நீட்டிப் பேசினாள் ராஜம்மா.

அவள் இருக்கிற இடத்திலே சிரிப்பும் துணை இருக்கும். ஹல்ப் - ஊய்ய்' என்ற கூச்சலும் கீச்சொலியும் விஜயம் செய்து போகும். குஷியும் கும்மாளியும் வளையமிட்டுக் கொண்டே இருக்கும். அமைதி என்பதை அறிந்து கொள்ளாத அழகி அவள். மெளனம் என்பதைக் கலையாகவோ, பண்பாகவோ போற்ற விரும்பாத குமரி அவள். -

அவளுடைய தோழி தங்கம் 'சாதுக் குழந்தை'. 'அடித்தால் கூட அழத் தெரியாத பாப்பா, இல்லை இல்லை; அழ.விரும்பாத பேதை' என்று ராஜம்மா கிண்டலாகக் குறிப்பிடுவது உண்டு. சிநேகிதிகளை சாதாரணமாகவே கெண்டை பண்ணி மகிழும்