பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆய்வேடு காட்டும்
வளர்ப்பு மகள்

பெற்ற மனத்தின் தன்மை இந்த நாவலின் கதைக்கரு. இதில் பெண்களின் உரிமை, எழுச்சி விளக்கப்படுகிறது. நாவல்களில் நல்லனவற்றையே சித்தரித்துக் காட்டும் இயல்பு உள்ளது. தீயனவற்றையும், தீமையையும் காட்ட வேண்டியதுதான். ஆனால், காட்டப்படும் தீமை அறுவருக்கத்தக்கதாக இருக்கவேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ளவேண்டும். அதன் அற்பத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும். ஏனெனில், "தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதையாரும் கண்டு அஞ்சமாட்டார்கள்" என்று வேதநாயகம் பிள்ளை கூறுவார். சமுத்திரம் இந்த நாவலில் நன்மை - தீமை இரண்டையும் காட்டி மக்களுக்குத் தெளிவு ஏற்படும்படி செய்துள்ளார்.

கதைப்பின்னல் இயற்கையாக அமைதல் வேண்டும். ஆசிரியர் பாடுபட்டு வலிந்து அமைப்பதாக இருத்தல் ஆகாது. நடக்கக் கூடியதே என்று நம்பத்தக்க வகையில் இயல்பாக அமையும் கதைப் பின்னலே கதைக்குக் கவர்ச்சி தருவதாகும். அதற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதாயாசிரியரின் திறனே ஆகும். உணர்ச்சி, அனுபவம் மிக்க ஆசிரியர் உணர்ந்து தேர்ந்த கதைப்பின்னல் சிறப்புடையதாக விளங்கும். இச்சிறப்பு இல்லையானால், எவ்வளவு சிறந்த வாழ்க்கைப் பகுதி கதையில் அமைந்தாலும் பயன் விளையாது.

"கதையின் போக்குக்கு இன்றிமையாத நிகழ்ச்சிகளை இணைத்து அந்நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அமையும்படிச் செய்வது என்பது நாவலாசிரியரது கடமை. இந்த நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை என்ற உணர்வு உண்டாகும்படி அவற்றை அமைக்கவேண்டும். இதை எடுத்துவிட்டாலும் கதையின் போக்குக்கோ பாத்திரங்களின் குணசித்திரத்துக்கோ வேறுபாடு ஏதும் இல்லை என்று எண்ணும் வகையில் ஏதேனும் திகழ்ச்சி இருந்தால், அது நாவலின் செறிவைக் கெடுத்து விடும்.

தாமஸ் ஹார்டியின் கலைத்திறனைப் பற்றி பிரடெரிக் ஆர். கார்ல் என்பார், ‘ஹார்டியின் கலைத்திறன் அழகிய முறையில் செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் இதயத்தையும் உட்பொருளையும் உயிரோவியமாகத் தீட்டுவதே ஆகும்’ என்று கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/5&oldid=1133646" இலிருந்து மீள்விக்கப்பட்டது