சு. சமுத்திரம்
41
பெருக்கினாள். எச்சிக் காபித் தம்ளர்களை துப்புறப்படுத்தி குலுக்கி, அவற்றைக் கழுவி வைத்தாள். ஜொலித்துக் கொண்டிருந்த எவர்சில்வர் தம்ளர்களை தன் புடவையை வைத்துத் துடைக்கப் போனாள். அந்த அழுக்குப் புடவையால் எவர்சில்வர் அழுக்காகும் என்று நினைத்தோ அல்லது எவர்சில்வர் அதில் ஒட்டிக்கொண்டு எடைகுறையும் என்று எண்ணியோ, "தம்ளருங்க நல்லாத் தானே இருக்கு" என்று பார்வதி முகத்தை அந்தப் பெயருக்குரிய லட்சணம் இல்லாமல் சுருக்கிக் கொண்டே கேட்டாள்.
பெருமாள் பேசிய பேச்சு. அவளுக்கு அப்போது முழுதாகக் கேட்டது.
சிறிதுநேரம் மெளனம்...
செல்லம்மா திக்கித் திணறிப் பேச்சைத் துவக்கினாள்.
"பார்வதி... நான் கேள்விப்பட்டது நிசந்தானா..?"
பார்வதிக்கு, எரிச்சலுக்கு மேல் எரிச்சல், தமாஷாகப் பேசுவதுபோல், திமிராகச் சொன்னாள்.
"நீங்க எதைக் கேள்விப்பட்டிங்கன்னு, எனக்கென்ன ஜோசியமா தெரியும்...?"
"இல்ல... நம்ம மல்லிகாவிற்கு. மாப்பிள்ளை..."
"ஆமாம், பார்த்துகிட்டு இருக்கோம்..."
"முடிச்சுட்டதா கேள்விப்பட்டேன்..."
'முடிஞ்சது மாதிரிதான்..."
"நம்ம ராமன்தான் மாப்பிள்ளையாமே..."
"ராமனேதான்..."
செல்லம்மா லேசாகக் கூனிக் குறுகினாள். மேற்கொண்டு பேசினால் அவள் பத்ரகாளியாவாள் என்று தெரியும். ஆகையால் அவள் தன் உணர்வுகளை 'பத்திரமாக' வைக்க நினைத்தாள். இருந்தாலும் பெற்ற பாசம் கேட்கவில்லை.
"நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது..."
'நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க... தப்பா நினைக்கக்கூடிய விஷயமா என்கிறதை சொன்ன பிறகு... சொல்றேன்..."
"உனக்கு இல்லாத உரிம இல்ல... நான் பெத்துத்தான் போட்டேன் அப்புறம் வளர்த்ததெல்லாம் நீதான். இருந்தாலும்... எனக்குக் காபி