VI
வர்ணனை
பெண்களை வர்ணிப்பதில் ஆசிரியரின் தனிச்சிறப்பைக் காணலாம். அவ்வகையில் சேக்கிழாரின் மனோநிலை ஆசிரியரிடம் அமைந்துள்ளது எனலாம். சேக்கிழார் தமது காவியத்துள் பெண்களைப் பற்றியும், காதலைப் பற்றியும் வருணிக்கும் இடங்களில், மிகத்தூய்மையான எண்ணம் தோன்றும்படி வருணித்துள்ளார். பரவையார் வருணனை, பரவையார் - சுந்தரர் காதல் - இவ்விடங்களில் சிறிதும் கீழ்த்தர உணர்ச்சி தோன்றா வகையில் வருணித்துள்ள சிறப்பியல்பைப் போன்று, சு. சமுத்திரம் களங்கமில்லாத எண்ணம் தோன்றும்படி பெண்களை வர்ணித்து உள்ளார்.
சு. சமுத்திரம் வெறும் பொழுது போக்கிற்காக மலிவான சுவையைத் தரும் கதைகளைப் படைக்காமல் மனித வாழ்க்கைககு எந்தக் காலத்திற்கும் பொதுவான, அடிப்படையான உணர்ச்சிகளையும், பண்புகளையும் விளக்கி கதைகளைப் படைப்பதால் அவருடைய நாவல்கள் என்றுமே வாழும் இயல்பைப் பெறுகின்றன. சமுதாயம் சீர்திருந்தி, அமைதியான வாழ்க்கை எல்லோர்க்கும் கிடைக்கும்படியாய்ச் செய்வதே அவருடைய எண்ணமாதலால் சமுதாயம் உள்ளவரையும் அவருடைய நாவலும் வாழும்.
"சு. சமுத்திர நாவல்கள் ஒரு ஆய்வு"
(ஜூலை 1980)