பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பொருளைத் தராசில் வைத்து நிறுத்துப் பார்ப்பதுபோல் பார்த்து உண்மையான பொருளைக் கண்டு கொள்வதுதான் அறிவு என்று பொருள்கொள்ள வேண்டும். இங்கு ‘யார்’ என்று இரண்டு சொற்கள் இருந்தாலும், பொருளால் வேறுபட்டுத் திருக்குறளை அழகுபடுத்துகின்றன. கூறியது கூறல் என்பது வள்ளுவர் குறளில் இல்லை. குறளிற் காணும் சொற்களை ஒரு பதக்கத்தில் இழைந்த மணிகள் எனக் கூறலாம். மேலே குறித்த குறளுக்குப் பொருள் ‘இவ்வுலகப் பற்றை விடுவதற்காக இறைவனுடைய திருவடியைப் பற்று’ என்பது உண்மையாகுமானால்,

"பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு”

என்பதே போதுமல்லவா? அப்படியானால், அப்பற்றைப் பற்றுக என்ற சொற்களுக்குப் பொருள் என்ன என்பதை அறிய அறிவுக்கு வேலை கொடுங்கள். “இவ்வுலகப் பற்றை விடுவதற்கு முதலில் ஞானாசிரியனைப் பற்று; பிறகு அவன் காட்டும் இறைவனைப் பற்று” என்பது பொருத்தமாக இருக்குமா? என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

ஒழுக்க உள்ளம்

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

என்பது ஒரு குறள் ஒழுக்கம் எல்லாவற்றையும்விட மேலானதாகக் கருதப் பெறுவது. தமிழரின் நாகரிகத்திற்கு ஆணிவேர் இக்குறள். பிறநாட்டார் ஒழுக்கத்தை விடுவதா? உயிரை விடுவதா? என்ற நிலை வரும்போது, உயிரைவிட மனமில்லாது ஒழுக்கத்தையே விட முற்படலாம். ஆனால், தமிழர்கள் அப்படியல்ல. வட துருவம் தென்துருவமாக மாறுபட்டாலும் ஒழுக்கத்தை மட்டும்