பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கோழியைப் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுகிறார்கள். ஏன் தங்களைக் காத்துக்கொள்ள இவர்களுக்குத் தெரியவில்லை. விக்கிரமும் தானே போய்த் தின்னுவதில்லை. இதற்கு ஆள் தேடி, அரிவாள் தேடி, வெட்டிக் கொன்று காட்டவேண்டும் போலும்! தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தெரிந்த கரடியை, புலியை, சிறுத்தையை, சிங்கத்தைப் பலியிடுவதாகச் சொல்லுவதுதானே! அவைகளைப் பிடித்தால் நம் கதி என்னவாகும் என்பதும் தெரிந்தது தானே! ஆகவே அவைகளைப் பலியிட நினைப்பதில்லை வலுவற்றது, வாயற்றது என்பதாகத் தன்னைத் தானே காத்துக்கொள்ளத் தெரியாத ஆடுகளையும், கோழிகளையும் பலி கொடுக்கிறோம். வள்ளுவரது அன்பு உள்ளம் இது தவறு என்று கூறுகிறது. அது மட்டுமல்ல, உன் உயிரைக் கொடுத்து மற்றொரு உயிரைக் காப்பாற்று என்றும் கூறுகிறது.

அருள் உள்ளம்

இக்காலத்தில் பலர் காதுகளுக்கு, மூக்குக்கு நகை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் வள்ளுவர் நம் கண்களிலும் ஒரு நகை அணியவேண்டும் என்கிறார். கண்களுக்கு உரிய நகை எது? அதுவே கண்ணோட்டம்! அதாவது வாடி வதங்குவோரின் துன்பங்களைக் கண்டு சகியாமல் வருந்தி முத்து முத்து நீர்வடிப்பதே கண்களின் நகையாக இருக்க வேண்டும் என்கிறது வள்ளுவர் உள்ளம்.

“கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்”

என்பதே இக்குறள். கண்ணோட்டத்தை அணிகலமாகக் கொண்டவர்களுடைய கண்களே கண்களென்கிறார்.