பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பெறுவது சூதன் என்ற பெயர் ஒன்றேயாம். அவன் இழப்பது நூறு! ஏது? பொன், புகழ், பெருமை, அன்பு, இரக்கம், மாடு, மனை, வண்டி, வாகனம், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் ஆகிய 100 நற்பண்புகளையும் இழந்து விடுவான் என்பதை நயம்பட உரைக்கிறார். இவரிடம் ஒரு சூதாடி வந்து, "நான்தான் திறமையாகச் சூதாடி எப்போதும் வெற்றி பெறுகிறேனே, நான் என்றும் இழப்பதே இல்லையே! நல்ல வருவாய் வருகிறதே! நான் சூதாடினால் என்ன?" என்று கேட்கிறான். அவனுக்கும் பதில் கூறுகிறார் வள்ளுவர்.

"வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று"

என்பது. 'நீ மீன் பிடிப்பதைப்பார்! புழுவைக் கொக்கியிற் பார்த்து இரையெனக் கருதி இரையை விழுங்கப்போகும் மீன் மடிந்து, பிறருக்கு இரையாவதை அறி. இன்று நீ பிறர்பொருளைச் சூதினால் கவர எண்ணலாம். ஆனால் அது உன்னைச் சீக்கிரம் சூது செய்துவிடும்' என்று எச்சரிக்கிறார். சூதுக்கு உவமை கூறவந்த வள்ளுவர், மீன் பிடிப்போன், உயிர்போக்கும் கருவியை உணவாகக் காட்டும் சூதான செயலையே உவமையாகக் கூறியது புலவர் பெருமக்களால் வியக்கத்தக்க தொன்றாகும்.

குடிகாரர் உள்ளம்

கள்ளுண்பது தவறு: பெருங் குற்றம். நீங்கள் கள்ளை உண்ணாதேயுங்கள் என்று கூறும் வள்ளுவர் கள்ளுக் கடைக்குப் போகிறார். பின்செல்லுங்கள். குடிகாரர்கள் சிலர் தள்ளாடுகிறார்கள். அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறார், இனிமேல் குடிக்கப்போகும் குடியர்களை,