பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


நட்புள்ளம்

உட்பகையைப்பற்றிக் கூறிய வள்ளுவர் உயரிய நட்பைக் கொள்ள வேண்டுமென்கிறார். உண்மையான நட்பு எது என்றும் சுட்டிக் காட்டுகின்றார். அது.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

என்பதே இக்குறளுக்கு ஆடை நெகிழ்ந்த சமயத்தில் மனம் கைக்கு விண்ணப்பம் செய்யாதிருந்த போதிலும், கை எப்படி விரைந்து வந்து கட்டி உதவி செய்கிறதோ, அதே போல் சினேகிதனுக்குத் துன்பம் வந்துற்றகாலை அவன் உதவி கேட்காதபோதிலும் உதவவேண்டும் என்று பொருள் சொல்கிறார்கள் பவர். இது தவறு. எனக்கு வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. உடுக்கையிழந்தவன் என்பது திருக்குறள் பாடமாக இருக்கும்போது, ஆடையைப் பறிகொடுத்தவன் என்பதுதானே பொருளாகும். அவ்வாறின்றி உடுக்கையிழிந்தவன் என்றிருந்தால்தான் ஆடை நெகிழ்ந்தவன் என்று பொருள் அந்தக் குறளின் பொருளைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். ஆடையைப் பறிகொடுத்து விட்டுத் துடிக்கும் ஒருவனைப்பற்றி நினைத்துப் பாருங்கள். அந்த நிலையில் அவனுடைய கை என்ன செய்யும்? மானத்தையன்றோ மறைத்துக் காப்பாற்றி நிற்கும். யாரைக் கேட்டு அப்படிச் செய்கிறது? அதேபோல் நண்பன் துன்புற்ற நேரத்தில் அவன் கேட்பதற்குமுன் அத்துன்பந் துடைப்பதே நட்பு என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறளில் ஆடை நெகிழ்வதை விட, வள்ளுவர் உள்ளம் நெகிழ்வதைக் கண்டு மகிழுங்கள்.