பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நம்பிக்கை கொண்டு இப்பாடலைப் பாடினார். தீயும் குளிர்ந்தது என்று சொல்ல வந்த அவர் ஐந்து பொருள்களை உவமையாகக் காட்டியுள்ளார். அவை ஐந்தும் குளிர்ச்சியுடைய பொருள்களே. என்றாலும், அதில் தோன்றும் நயம் எல்லாம் அவை ஐந்து பொருள்களும் தனித் தனியே ஐந்து புலன்களுக்கும் (பஞ்சேந்திரியங்களுக்கு) குளிர்ச்சியுடையதாகக் காட்டுவதேயாகும்.

மாசில் வீணை காதுக்கு
மாலை மதியம் கண்ணுக்கு
வீசு தென்றல் மூக்குக்கு
வீங்கிள வேனில் உடலுக்கு
பொய்கையின் நீர் நாவுக்கு

இந்த ஆராய்ச்சி நமது உள்ளத்தைக்கூடக் குளிரச் செய்கிறது அல்லவா? இதிலிருந்து ஒரு பொருள் ஒரு புலனுக்கு மட்டுமே இன்பம் தருவது என்று அறிகிறோம். பின்னும் சில பொருள்கள் 1, 2, 3 புலன்களுக்கு (மா, பலா கண் மூக்கு நாவுக்கு) இன்பந் தரக்கூடியவையாகும். ஆனால் வள்ளுவர் ஐந்து புலன்களுக்கும் இன்பந்தரும் ஒரே பொருளைத்தேடி, ஆராய்ந்து கண்டு, நமக்குக் கூறிவிட்டார்.

"கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள."

என்பதே அக்குறள். "கண்ணாற் கண்டும், காதாற்கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் மகிழ்கின்ற ஐம்புல இன்பமும் பெண்மை யுள்ளம் படைத்த பெண்ணிடத்தேயுள்ளது" என்பதே இக்குறளின் கருத்து. எப்படி வள்ளுவரின் ஆராய்ச்சி! வேறு எவரும் இத்துறையில் இவ்வாறு ஆராய்ந்து கூறியதாக நமக்குத் தெரியவில்லை.