பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வறுமை உள்ளம்


"இன்றும் வருவது கொல்லோ நெருகலும்
கொன்றது போலும் நிரப்பு"

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

"நேற்று வந்து என்னைக் கொன்றது போன்ற வறுமைத் துன்பம் இன்றும் வருமோ” என்பது இதன் பொருள். இது 'நல்குரவு' என்ற தலைப்பில் வந்த ஒன்று.

104, 105, 106 அதிகாரங்கள் என 'உழவு' 'நல்குரவு' 'இரவு' என்பன அமைந்து, சங்கிலித் தொடர்பு போன்று ஒன்றைப் பற்றி ஒன்று நின்று, ஓர் உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன. அது உழவுத் தொழில் தலைசிறந்தது; இன்றேல் வறுமை வரும்; வந்தால், 'இரந்துண்ண நேரிடும்' என்பதே.

நல்குரவு என்பது வறுமை. வடமொழியாளர் இதனைத் 'தரித்திரம்’ என்பர். வள்ளுவர் இதனை இன்மை, இடும்பை, நிரப்பு என்ற சொற்களால் காட்டுகிறார். வறுமை அடைந்த மக்களை 'நல்கூர்ந்தார்' 'துப்புரவு இல்லாரி' எனக் குறிப்பிடுகிறார்.

இன்மை இல்லாமையையும், இடும்பை துன்பத்தையும் குறிப்பன. நிரப்பு நிறைவையும், குறைவையும்