பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


"துன்பமானது ஒருவனுக்கு வெளியிலிருந்து பிறர் செய்து வருவது மட்டுமல்ல. ஒருவன், தானே தன் செயலாலேயே இதைத் தேடிக்கொள்ளவும் வரும்" என்பதை இக்குறள் கூறாமல் கூறுகிறது.

"வைகிறவன் வையப்படுவான்". "அறைகிறவன் அறையப்படுவான்" என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை "வாழ்த்துகிறவன் வாழ்த்தப்பெறுவான், அன்பு செலுத்துகிறவன் அன்பைப் பெறுவான்” என்பது, இவ்வுண்மையை இக்குறளில் வள்ளுவர் 'நோயின்மை வேண்டுபவர் நோய்செய்யார்' என்ற சொற்றொடரால் விளக்குவது, எண்ணி எண்ணி மகிழக் கூடியதாகும்.

அண்மையில் நான் சிறையில் இருந்தபொழுது, தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற ஒரு கொலையாளியைச் சந்திக்க நேர்ந்தது அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வியப்படைந்து காரணம் வினவினேன்.

"என் தந்தைக்கு தானே தேடிய சொத்து சிறிது இருந்தது. அதை அவர் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கொடுக்காமல், பிறருக்கு உயில் எழுதிவைக்க முயன்றார். நான் எவ்வளவோ கூறியும் கேளாததால் கொன்று விட்டேன். உயிலும் எழுதவில்லை. என் தந்தையும் இறந்துவிட்டார். நானும் இறக்கப்போகிறேன். சொத்து என் பிள்ளைகளுக்குச் சேர்ந்துவிடும். என் எண்ணம் நிறைவேறிவிட்டது. நான் எதற்காகக் கவலைப்படவேண்டும். சாவை மகிழ்வோடு வரவேற்கிறேன். இன்னும் சில நாட்கள் சென்று தூக்கிலிடுவதைவிட, இன்றே தூக்கிலிட்டால் இன்னும் மகிழ்வோடு சாவேன்" என நெஞ்சு நிமிர்ந்து கூறினாள்.

நான் பெரிதும் வியப்படைந்ததோடு, "நோய் எல்லாம் நோய் செய்தார் மேல்" என்ற குறளும் பொய்த்து