பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின்பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லையன்றோ? இன்னும் இப்பாடலுக்கு, வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை, இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்று விடலாம் என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே! எனவே, பழைய உரையாசிரியர்கள் கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப்போகும் ஒரு குறளில் இந்தப் புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கிவிட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்தக் குறள் அமைப்பு இடம்தரவில்லை என்றே உணர்கிறேன். அறத்தாறு என்று சொல்லி, பின் புறத்தாறு என்றால், அது அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருப்பின், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு இல்லையாதலின், பழைய உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது. "பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு" என்னும் கொள்கையைப் பின்பற்றி யான் இக்குறளுக்கு உரை எழுதியிருக்கும் நுணுக்கத்தை இலக்கணம் கற்றோர் உணர்வர். தீயன கண்டிப்பதற்கும் இடம் இது. இந்தக் குறளில் "போஒய்" என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் "போய்" என்பதுதான். இதன் நடுவே "ஒ"என்னும் ஓர் எழுத்து சேர்ந்துள்ளது. இந்த எழுத்துக்கும் இங்கே தனி ஒலி இல்லை. "போ" என்பதை நீட்டிச் சொல்லும்போதே "ஒ" என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். "போ-ஒய்" எனப் பிரித்துப் படிக்காமல், "போஒய்" என ஒரே நீட்டாய்நீட்டிச் சொல்லிவிடவேண்டும். 22 பேரா. சுந்தர சண்முகனார்