பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னவிதான் வாங்கிவரச் சொன்னாள் என்பார். உடனே நண்பர், அப்படியா தாய்தந்தையரைவிட மனைவி இருந்தால்தான் உனக்கு வீடு வீடாகத் தெரியும் போலும் எனக்கூறி நகையாடுவார். நான் இவ்வளவு நேரம் வீண்கதை எழுதவில்லை. எழுத்துக்கு எழுத்து இந்தக் குறளின் விளக்கமேயாகும். வள்ளுவர் இல்லாள் இல்லாள் என்று சொல்லியிருப்பதிலுள்ள உண்மை இதுதான் ஒரு சிலர் இந்தத் "தத்துவத்தை" இன்னும் கூர்மையாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனைவி பேரால் வீடு வாங்குபவர்களைத்தான் சொல்லுகிறேன். ஆனால், அவர்கள் பங்காளிக்குப் பாய்ச்சல் காட்டுவதற்காகவும், கடன்காரர்களுக்குக் கடுக்காய் கொடுப்பதற்காகவும், பெண்டாட்டி பேரால் வீடுகளை வாங்கிப் போட்டுவிட்டதாக உலகினர் சொல்கின்றனர். அவர்களைக் கேட்டால், நாங்கள்"இல்லாள்" என்னும் திருவள்ளுவர் வாக்குக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று சொல்வார்களோ என்னவோ தீர்ப்பை உங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன். சில குடும்பங்களில் கணவன் கட்டிக்கரும்பாய் இனிக்கிறான்; மனைவியோ எட்டிக்காயாய்க் கசக்கிறாள். எனவே, கணவனுக்குப் பண்பாடு இருந்தால் போதாது; மனைவிக்கு மாட்சிமை வேண்டும் என்பதை வற்புறுத்தவே, "இல்லாள் கண் இல்லாயின் இல்" என்று அடுக்கினார் ஆசிரியர். இங்கே, இல்லாள் என்பதன் இறுதியில் உள்ள "ள்" என்னும் எழுத்தையும், "கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபில் உள்ள "ண்" என்னும் எழுத்தையும் நன்கு அழுத்தந் திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க) வேண்டுமல்லவா? அவ்வாறு அழுத்தி ஒலிக்கும்போது, அந்த வற்புறுத்தல் குறிப்புத் தோன்றுவது காண்க. இன்னும் இரண்டுமுறை சொல்லிப்பார்ப்போம், மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின், மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் என்ன சொல்நயம்! எவ்வளவு பொருள் நயம்! நேரில் பாடம் சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் இன்னும் நன்றாக எடுத்துக் காட்ட முடியுமல்லவா? வள்ளுவர் கண்ட மனையறம் 4 1