பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தெளிவுரை) கற்பென்னும் கலங்காவன்மை இருந்தால், உலகில் பெண்ணை விட மேலான பொருள்கள் யாவை? (ஆராய்ச்சி உரை)"கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை" என்றார் ஒரு பெரியார். கற்பு எனப்படுவது, "கட்டிய கணவன் கல்லா யிருந்தாலும் வேறு எவரையும் கருத்தாலும் கருதாத தூய்மை" என்கின்றனர் ஒரு சிலர். "பிறந்த வீட்டில் பெற்றோரும், புகுந்த வீட்டில் கணவன் முதலியோரும் கற்பித்தபடி ஒழுகுதலே கற்பு" என்கின்றனர் ஒரு சிலர். "சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்" என்னும் அழகு பொருந்தக் கற்பு என்னும் சொல்லுக்கு நாம் பொருள் காண்போமாயின், திருக்குறளுள், வாழ்க்கைத்துணை நலம் என்னும் இப்பகுதியுள், பெண்கட்கு இருக்க வேண்டுவனவாகக் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் கற்று, அவற்றைச் செயல்முறையில் செய்து காட்டுவதே சிறந்த கற்பாகும் என்று ஒருவாறு துணியலாம். இதனுள் அடங்காததாக ஏனையோரால் இயம்பப்படும் கற்பு நிலைதான் யாதுளது? "பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு, பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு" என்னும் மொழிப்படி, இருப்பதைக் கொண்டு இல்லாததையும் ஈட்டி, கணவன்களிக்கக் கற்புக்கடன் பூண்டு திகழும் ஒரு மங்கையை மனைவியாகப் பெற்ற மணவாளனுக்கு, அவளினும் மாநிலத்தில் பெறத்தக்க மாண்பொருள் வேறு யாது? ஒன்றும் இல்லையென்பது குறட்கருத்து. 5. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. (பதவுரை) தெய்வம் - கடவுளை, தொழாஅள் - வணங்காதவளாகிய, கொழுநன்-கணவனையே, தொழுது-வணங்கி, எழுவாள்-(பின்பே) எழுந்து சென்று வேறு வேலை செய்யும் பெண்மணி, பெய் என - பெய் என்று (மழைக்குக்) கட்டளையிட, மழை பெய்யும் - மழையானது பெய்யும். 4 6 பேரா. சுந்தர சண்முகனார்