பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கோட்டம் ●

4

● கவியரசர் முடியரசன்



கோட்ட வாயில்

உலகப் பெருமையை நமக்கு ஈட்டித் தந்த ஒரு நூல் திருக்குறள். அத்தகு சிறப்பு வாய்ந்த நூல், தமிழ்மறை என்று சாற்றவும் படுகிறது. உலகப் பொதுமை ஓதுவதால் பொதுமறை எனவும் புகலப்படுகிறது. அத்தகு பெருமை வாய்ந்தது நம்மறை.

நம்மறையை நாம் உணர்ந்துள்ளோமா? உணர்ந்து நடக்கின்றோமா? நெஞ்சில் கைவைத்து விடை சொல்ல நமக்கு வாயுண்டா? குறள்நெறி, நாம் ஒழுகியிருப்பின் இன்று காணும் கொடுமைகள் நடைபெறுமா? மக்கட்பண்பும் மறைந்திருக்குமா? மக்களை நம்மால் காணமுடிகிறதா? எங்கோ சிலரே அரிதாகத் தென்படுகின்றனர். திருக்குறள் நம்மறை என நம்புவது உண்மை யானால் அரசியல், சமுதாய இயல், தனி மனித இயல், இப்படிப் பாழ்பட்டிருக்குமா?

ஆதலின் நம்மறை கூறும் நெறி முறைகள் நாடெங்கும் பரவ வேண்டும் என்னும் ஆர்வத்தால், இந்நூல் வெளியிடப் பெறுகிறது. உங்கள் ஒத்துழைப்பும் இருப்பின் அவ்வார்வம் நிறைவேறும். நிறைவேறின் சண்டை ஏது? சச்சரவு ஏது? மக்கட் பண்பல்லவா நம்முள்ளங்களில் தாண்டவமாடும். உலகப் புகழுக்கும் நாம் உரியராவோம்! வருக! கை தருக!