பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கோட்டம் ●

5

● கவியரசர் முடியரசன்



வள்ளுவம் பற்றிய பாடல்கள் தொகுக்கப் பெற்றமையால் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயருடன் இந்நூல் உலாவருகிறது. அலுவலகங்களிலும், ஆலயங்களிலும், நண்பர்கள் இல்லங்களிலும், நாடக அரங்குகளிலும், புகும்பொழுது இடத்திற்கேற்ற மன நிலையைப் பெறுகிறோம். அதுபோல் இக்கோட்டத்தினுள் புகுவார்க்கும் ஒரு மன நிலை வேண்டும். இம் மனநிலைதான் ஆன்ற பயன் தரும்.

தண்ணீர் மேல்மட்டத்திலேயே தோன்றிக் காட்சி இன்பம் தரும் தாமரை மலர் போன்று, மேலோட்டமாகப் பயில்வார்க்கு இன்பம் பயப்பனவும் இந்நூலுள் உண்டு. நீந்திக் குளிப்பார் பெறும் இன்பம் போல, இறங்கி நீந்துவாரும் இன்பம் மாந்திக் களிப்பர். மூழ்கி எழுவார், உயரிய பொருள்கள் பெற்றுத் துய்த்தலும் ஆகும்.

இதில் இன்பங்காண விழைவார்க்கு ஓரளவேனும் மொழிப் பயிற்சியும், நூற் பயிற்சியும் வேண்டப்படுவனவாம். பயிற்சியில்லார் எதிற்றான் இன்பங்காண முடியும்! ஆதலின் பயில்க! பயன் பெறுக!


அன்புள்ள
முடியரசன்.