பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

நாள்தோறும் மேற்கொண்ட இராமபஜனைக்கு, இளமையிலேயே வித்தூன்றப்பட்டது என்பதை அறியலாம். போர்பந்தரில் வாழ்ந்தபோது அவருடைய வீட்டில் நாள்தோறும் அவர் தந்தையின் முன்னால் இராமாயணம், படிக்கப்படுவதுண்டாம். இராச கோட்டையில் பாகவதம் படிக்கப்பட்டதாம். இவைகளைக் கேட்டதனால், இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களின்பால் இளமையிலேயே தமக்குப் பற்று ஏற்பட்டது என்று காந்தியடிகள் கூறுகிறார்.

காந்தியடிகளின் பெற்றோர்கள் வைணவர்களாக இருந்தாலும், சிவன் கோவிலுக்கும் வழக்கமாகச் செல்வதுண்டு. சைவ சமய நோன்புகளையும் அவருடைய தாயார் மேற்கொண்டு ஒழுகுவாராம். சமணப் பெரியார்களும் அடிகளின் இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள். காந்தியடிகளின் தந்தையாருக்கு இசுலாமிய நண்பர்களும், பாரசீக நண்பர்களும் பலருண்டு. அவர்களும் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். சமயங்களைப்பற்றிய உரையாடல் நடைபெறும். நோய்வாய்ப்பட்டிருந்த தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டே, மோகனதாஸ் காந்தி மேற்படி உரையாடல்களைக் கவனமாகக் கேட்பார். இதன் பயனாக, ‘எல்லாச் சமயங்களும் கடவுளுக்கு ஏற்ற சமயங்களே’ என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இளமையிலேயே ஏற்பட்டது.

ஆனால் கிருத்தவ சமயத்தின் மேல் மட்டும் காந்தியடிகளுக்கு அந்நாளில் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குக்காரணம், பள்ளிக்கூடத்-