பக்கம்:வானொலியிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

மீண்டும் படிக்கத் தெவிட்டாமல் சுவை தந்தன என்றால், அவற்றை இப்புத்தகத்தில் முதல் முதலில் படிப்பவர்க்கு அவை உவகை தருவதில் ஐயமில்லை. கற்றாரும் முன்னறியாப் பல புதிய செய்திகளை இவற்றில் காணலாம். உளம் தளராமல் மேல்வரும் பொருளை உணர்ந்துவக்க ஆவலூட்டி, எதிர்பார்ப்பதிலும் அதிக இன்பம் உதவி, படிப்பவர்க்கு முடிவில் மேலும் பேசாமல் நிறுத்த நேர்ந்தமைக்கு வருத்தம் உறுத்தும் இன்னுரைகள் இவை. பதவி, வயது, மதம், பால், கொள்கைகளில் வேறுபடுவாரும் வெறுப்பின்றி விரும்பி வரவேற்கும் நடுநிலையும், நாட்டு நலம் நாடுபவர் யாவரும் பேணத்தக்க பொருள் நயமும் வாய்ந்துள்ளன. இவைபோலவே, இவர்களின் பேருரைகள் பலவற்றையும் திரட்டி வெளியிடுவது தமிழ் இளைஞர் பலர்க்கும் பெரும் பயனும், யாவர்க்கும் நயனும் தரும் என நம்புகிறேன்.

பசுமலை

இளசை கிழான்

18.11.47

ச. சோ. பாரதி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/7&oldid=486569" இலிருந்து மீள்விக்கப்பட்டது