பக்கம்:வாழும் வழி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

47


உறுதிப்பொருள்களை உரைப்பதுதானே தொன்று தொட்ட முறை” என்றெல்லாம் பலர் போர் முழக்கம் இடுவது புரிகிறது.

பழைய சங்கப் புலவர்கள் சிலர் திருக்குறளுக்கு மதிப்புரை (விமர்சனம்) வழங்கியுள்ளனர். அவர்கள் எழுதிய பாக்களின் தொகுப்பாக, ‘திருவள்ளுவ மாலை’ என்னும் பெயரில் ஒரு நூல் உலவுவது பலர்க்கும் தெரிந்திருக்கலாம். அந்த நூலை நன்கு துருவிப்பார்க்க வேண்டும். ‘அறம் பொருளின்பம் முப்பால்’, ‘அறம் பொருளின்பம் முப்பால்’ என இளமையிலிருந்து பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்துப் பழகிப்போன பழங்கண்களால் திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் பார்க்கக்கூடாது. ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும். படிக்க வேண்டும். அப்பொழுது புரியும் திருக்குறளின் அமைப்பு முறை.

திருக்குறளுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே ‘சனியீசுவரன் கோயில் சாமி’களைப் போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவை வருமாறு:

(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை - 9 - கல்லாடர், 10- சீத்தலைச்சாத்தனார், 11 - மருத்துவன் தாமோதரனார்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/49&oldid=1104923" இலிருந்து மீள்விக்கப்பட்டது