பக்கம்:வாழும் வழி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வாழும் வழி



பள்ளிக்கூடத்துக்கு வெளியிலே பயனற்ற ஏடுகளைப் படிப்பது மட்டுமல்ல பள்ளிக் கூடத்திலேயுங் கூட பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படாத பல செய்திகள் படிக்கப்படுகின்றனவே. அது கூடாது. வாழ்க்கைக்குப் பயன்படுவனவே கற்கப்பட வேண்டியனவாம். கற்கக் கூடாதவற்றைக் கற்றுக் காலத்தைக் குறைத்துக் கொள்ளற்க; கற்க வேண்டியவற்றையே கற்பீராக, என்று சொல்ல வந்தவர் போல் ‘கற்பவை கற்க’ என்றார் ஆசிரியர். மூன்றாண்டுகள் முற்றுங் கற்றாலும் முடிவு பெறாத ஒரு தேர்வுக்கு (பரீட்சைக்கு) உரிய நூற்களை நான் மூன்றே திங்களில் கற்று முடித்துத் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுவிட்டேன் என்று வெட்கமில்லாமல் மார்பு தட்டிப் பெருமை பேசுகின்ற பேயர்களே! முக்கியமாய்த் தேர்வுக்கு வரக்கூடியது எது என்று பார்த்துக் கோடு கிழித்துப் படித்துத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வுத்தாள் திருத்துபவரைத் துரத்துகின்ற பித்தலாட்டப் பேடியர்களே! உங்களால் எல்லோருக்கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது; பிழையற ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர் போல ‘கசடறக் கற்க’ என்றார் ஆசிரியர். ‘கல்வி என்பது பின்னால் பயனளிப்பதுதான்’ என்னும் கல்விக் கொள்கைக்கு அகச் சான்றாக, ‘கற்றபின் நிற்க' என்னும் தொடரிலுள்ள பின் என்னும் ஒரு சொல்லே போதுமே கற்றபின் அதற்குத் தக ஒழுகுக - அல்லது நடக்க’ என்று சொல்லாமல் ‘நிற்க’ என்றது ஏன்? ஒழுகுதலில் தளராத உறுதி வேண்டும் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/56&oldid=1105682" இலிருந்து மீள்விக்கப்பட்டது