92
‘வாழையடி வாழை’
'இன்பம் எனப்படுதல் —தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!’
—பாரதிதாசன் கவிதைகள்:தமிழ் உணர்வு
என்று தம் தண்டாத தமிழார்வ வெள்ளத்தினை வெளிப்படுத்துவதோடு தமிழ் வளர்ச்சிக்குத் தளராது செய்யவேண்டிய கடமையினையும் வற்புறுத்துகின்றார்.
'எளியநடை யில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்;
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதி தாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்!’
—பாரதிதாசன் கவிதைகள் : தமிழ் வளர்ச்சி
மேலும், தமிழர் வாழ்விற்கு வற்றாத வளம் சேர்ப்பது தமிழே என அறுதியிட்டுக் கூறி, தமிழர் ஒன்று சேர்ந்து ஒரு முகப்பட்டுத் தமிழின் உயர்விற்குச் செயலாற்றவேண்டிய சிறப்பினையும் குறிக்கின்றார் கவிஞர்.
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
'திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றாேடும் பிறந்ததமி
ழுடன் பிறந்தோம் நாங்கள்; ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம்செய் முழங்கு சங்கே!