பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாழ்க்கைச் சுவடுகள் நான் ஏற்புரையில் சுயசரிதை எழுதும்படி பலரும் கூறிவந்ததைக் குறிப்பிட்டுவிட்டு, இதுவரை நான் எழுதவிருப்பம் இல்லாமலே இருந்தேன்; இப்போது நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, சுயசரிதம் எழுத இசைவு தெரிவிக்கிறேன்; அதை அமுதசுரபிக்கே அளிப்பேன் என்று அறிவித்தேன். அரங்கம் முழுவதும் கைதட்டி அதை வரவேற்றது. தினமணி நாளிதழ் அதை எடுப்பாக வெளியிட்டது. அச்செய்தியைப் படித்த அன்பர்கள் பல இடங்களில் இருந்தும் கடிதங்கள் எழுதி வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஏற்கெனவே பலமுறை என்னை எழுதும்படி தூண்டிவந்த மணலி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெ. இளவரசு மிகுந்த மகிழ்ச்சியோடு கடிதம் எழுதினார். நீங்கள் எழுதத் தொடங்கிவிடுங்கள்; அதைப் பிரதி எடுப்பது போன்ற வேலைகளில் நான் உங்களுக்கு உதவ வருவேன் என்று. இப்படி எண்ணற்றோர் எதிர்பார்த்த இனிய பணியை நான் உடனடியாகத் தொடங்கிவிடவில்லை. தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். அந்நிலையில்தான் பேராசிரியர் மாரா. அரசு எனக்கு உதவ முன்வந்தார். நீங்கள் உங்கள் சுயசரிதையை எழுதி எங்களுக்குக் கொடுங்கள்; டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு வட்டம் அதை நூலாக வெளியிடும் என்றார். ஆய்வு வட்டத்தின் செயலர் அவர்; தலைவர் பேராசிரியர் முனைவர் இசுந்தரமூர்த்தி, பொருளாளர் பூங்கொடி வே. சுப்பையா ஆகியோரும் இதை விரும்புகிறார்கள் என்று கூறினார். நான் எனது சுயசரிதத்தை அமுதசுரபி மாத இதழில் தொடராக வெளியிடுவதற்குத் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேனே என்று கூறினேன். மாதப் பத்திரிகையில் இதழ்தோறும் நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் சுயசரிதம் வெளிவருவதைவிட, மொத்தமாகப் புத்தக வடிவத்தில் பிரசுரம் பெறுவதே நல்லது; அதிகப் பயன் அளிக்கக் கூடியது என்று நண்பர் மா.ரா.அரசு விளக்கினார். நானும் யோசித்து அந்த முடிவுக்கே வந்தேன். இந்தத் தன்வரலாறு எழுதப்படுவதற்கு உந்துதலாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி உரியது. அதை நூல் வடிவில் கொண்டு வருவதில் முனைப்பாக இருந்த பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி, நண்பர் மா.ரா.அரசு, பூங்கொடி வே. சுப்பையா மூவருக்கும் மிகுந்த நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். - ஆவலுடன் என் சுயசரிதையை எதிர்பார்க்கும் அன்பர்கள் அனைவருக்கும் இது முழுத்திருப்தி அளிக்குமா என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை. எனது காலத்தைப்பற்றியும் காலமும் நாட்டின் நிலைமைகளும்