பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வாழ்க்கைச் சுவடுகள் சமூகப் பணி, சமயத் திருப்பணி போன்றவற்றுக்குத் தாராளமாகக் கொடுக்கிற செல்வர்கள் கூட மொழி இலக்கியம் சம்பந்தமாகப் பணம் செலவு பண்ணத் தயாராக இருப்பதில்லை. தற்காலத்திய நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டுவருகிறது. அறக்கட்டளை அமைத்துத் தமிழ்ப்பணி இலக்கியப்பணிக்கு என்று தாராளமாக நிதி வழங்கும் மனம் செல்வர்களிடையே அதிகரித்து வருகிறது. கொடுக்கும் மனம்பற்றிப் பழந்தமிழ்ச் செய்யுள் ஒன்று அழகாக விவரித்திருக்கிறது. சொல்லாமலே செய்வர் பெரியோர் - சொல்லிச் செய்வார் சிறியர் - சொல்லியும் செய்யார் கயவரே என்று கூறும் அப்பாடல் உவமையாக 'பலா, மா, பாதிரி' யைக் காட்டுகிறது. அதையே பூவாதே காய்க்கும் மரமும் உள, பூத்துக் காய்க்கும் மரங்களும் உண்டு பூத்தும் காய்க்காத மரங்களும் இருக்கின்றன என்று கூறி, மனிதர்கள் தன்மையைக் சுட்டுகிறது வேறொரு பாடல். பலாமரம் வெளிப்படையாகப் பூக்களைக் காட்சிப்படுத்துவதில்லை. ஆயினும் பயனுள்ள சுவை மிகுந்த பழங்களைக் காய்த்து விளங்குகிறது. மா போன்ற மரங்கள். நாங்கள் காய்த்துக் குலுங்கப் போகிறோம் என்று விளம்பரப்படுத்துவது போல் பூக்களை அதிகம் அதிகமாக மலர்விக்கின்றன: அப்புறம் காய்களை உண்டாக்குகின்றன. பாதிரி மரம் பளிர்ச் சிரிப்புபோல் பூக்கள் தாங்கி மினுக்குகின்றன. ஆயினும் அவை காய்ப்பதில்லை. இவை மனிதரின் கொடைத்தன்மைக்கு உவமைகளாக்கப்பட்டிருக்கின்றன. எக்காலத்திலும் இம் மூன்றுவகை மனம் பெற்றவர்கள் மனிதரிடையே இருக்கத்தான் செய்வர். கொடுக்கும் மனம் பெற்றவர்கள் பிறருக்குத் தெரியாமல் தகுதியானவர்களுக்குப் பலவகை உதவிகளும் செய்கிறார்கள். நன்றியுரை, பாராட்டு, புகழ் வெளிச்சம் என்று எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் உதவுகிறார்கள். கொடுப்பதில் அவர்கள் ஒரு மனநிறைவு - ஆத்மதிருப்தி பெறுகிறார்கள் என்று சொல்லலாம். செல்வர்கள்மட்டும்தான் இப்படிக் கொடுத்து மகிழும் மனமும் பண்பும் பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்லுதற்கில்லை. வாழ்க்கையில் பல்வேறு தரத்தில் உள்ளவர்களிடையேகூட இத்தகைய பண்பாளர்கள் இருக்கிறார்கள். தாராளமாக அள்ளி வழங்கும் உயர் மனம் பெற்றுள்ள அபூர்வ மனிதர்களில் கோயம்புத்தூரில் வசிக்கும் ஈ.எஸ். தேவசிகாமணியும் ஒருவராவார். ஈ.எஸ். டியின் நல்லியல்புகள் பற்றி நண்பர் ஞானன் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பேசி மகிழ்வார். எழுத்தாளர் செ. ஞானன் சிவகாசியில்