8
வாழ்க்கை
உலகில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்; எல்லோரும் அவரவர் இன்பத்தையே தேடி அலைகிறார்கள்; எல்லோருமே அந்த இன்பம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே மனித சமூகத்தில் தோன்றிய பண்டைப் பெரியார்கள் அனைவரும் உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒரே மாதிரியாகவே விளக்கி யிருக்கிறார்கள்.
‘வாழ்க்கை ஒரு யாத்திரை ; ஆன்மாக்கள் பக்குவமடைந்து மேலும் மேலும் இன்பப் பேற்றை அடையும் மார்க்கம்’ என்று மிகப் புராதன காலத்திலேயே இந்திய நாட்டு வேதியர் [1] கூறியுள்ளனர்.
‘மனித சமூகத்தின் நன்மைக்காக விண்ணகத்திலிருந்து வந்த ஒளி பரவி நிற்பதே வாழ்க்கை’ என்று கன்பூஷியஸ்[2] கூறியுள்ளார்.
‘நிர்வாண முக்தி பெறுவதற்காக “நான்” என்ற அகங்காரத்தைத் தியாகம் செய்வதே வாழ்க்கை, என்று புத்தர் கூறியுள்ளார். இவர் கன்பூஷியஸ் காலத்தவர்.
‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே[3] அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர்.