55. நாள் எனும் வாள்!
ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப்பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும் பகுதி, தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?
கடற்பரப்பின் தண்ணிர் கணக்கற்ற தண்ணிர்த்திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற்பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தை-தன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக் குறைவு! ஆயுளும் அற்பமே!
மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி, வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல், குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம் மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது.
ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும்