பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வாழ்க்கை நலம்

அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணைசெய்தல் நல்லது.

ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய் மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் கற்கும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.

அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்பமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/14&oldid=1132994" இலிருந்து மீள்விக்கப்பட்டது