பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு செய்க

33

விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும். வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும். இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும். ஆன்மநேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும். ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது, காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரொளியால் சுடப்பட்டு இறந்து போகிறது; அழிந்து போகிறது. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! ம னி த ன், எலும்பு உள்ள மனிதன்! அதிலும் முதுகெலும்பு உள்ள மனிதன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

           "என்பி லதனை வெயில்போலக் காயுமே
            அன்பி லதனை அறம்"

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/35&oldid=1133017" இலிருந்து மீள்விக்கப்பட்டது