பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. வளரும் தலைமுறை

வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம், அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரை பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர்காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.

இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட. மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.

       "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
        மக்கட்பேறு அல்ல பிற"

என்பது திருக்குறள். 'அறிவறிந்த' என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/45&oldid=1133027" இலிருந்து மீள்விக்கப்பட்டது