பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றி மறவேல்

49

இந்த உலகில் நல்லவர்கள்-நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார்மீது காழ்ப்புணர்ச்சி கால்கொள்ளும் -அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர-வாழ வழி!

      "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
      அன்றே மறப்பது நன்று."

இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உள இயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும். அவ்வளவு தான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/51&oldid=1133034" இலிருந்து மீள்விக்கப்பட்டது