பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

23


 டில்லியில் அப்போது கடுங்குளிர் நிலவியது. என்றாலும் மணவிழாச் சிறப்பு குளிரின் கொடுமையை ஒட்டி விரட்டி விட்டது. விஜயலக்ஷமியும் கிருஷ்ணாவும் அங்கு குழுமிய உறவுமுறைச் சிறுவர் சிறுமியரோடு ஆடிப் பாடி அகமகிழ்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் விருந்தும் வைபவமுமாகப் பொழுது பொன்னாகக் கழிந்தது. இப்படிப் பத்து நாட்கள் அவர்கள் அமோகமான அனுபவம் பெற்றனர். பிறகு அலகாபாத் அடைந்தார்கள். அங்கும் பல தினங்கள் வரை விசேஷங்கள் தொடர்ந்தன; அவர்களை மகிழ்வித்தன.

வீட்டுக்கு வந்த புதுமணப் பெண் கமலா அவர்களுக்குப் பிடித்த இனிய தோழியாகி விட்டாள். 1917-ம் வருஷம் ஜவஹர்-கமலா தம்பதியின் ஒற்றைத் தனி மகள் இந்திரா பிறந்தாள்.

அவ் வருஷம் முக்கியமான விசேஷம் வேறு ஒன்றும் நிகழ்ந்தது. நேரு சகோதரிகளின் ஆசிரியையான மிஸ் ஹுப்பர் ஆங்கிலேய நண்பர் ஒருவரைக் காதலித்து, விரைவில் மணந்து கொள்ளத் தீர்மானித்தாள். அவளுடைய உறவினர் அனைவரும் இங்கிலாந்தில் இருந்தனர். ஆகையினால் மோதிலால் நேருவே தந்தை ஸ்தானத்திலிருந்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முன் வந்தார். மாதாகோயிலில் மணவினை நடந்தது. அவளது மாணவிகளே மணப்பெண்ணின் தோழியராக விளங்கினார்கள்.

அக் கலியாணம் நேரு சகோதரிகளுக்கு மகிழ்வூட்டும் சம்பவமாக இருந்த போதிலும், அவர்கள் உள்ளத்-