பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

எஸ். எம். கமால்

அழைத்து வந்து, எனது சீமையைக் கொள்ளையிட்டனர். நவாப்பினது சோழவந்தான் கோட்டை அதிகாரி முல்லாராவை சின்ன மருது கொன்றுவிட்டு மதுரை, சிவகங்கை, காளையார் கோவில், திருப்பத்துார் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்தையும் துண்டித்து விட்டான். மேலும், எனது முந்தைய பிரதானி பிச்சைப்பிள்ளையையும், நவாப்பின் சில வீரர்களையும், மதுரைக்கு அண்மையில் கொன்றுபோட்டதுடன் ஏராளமானவர்களையும் காயப்படுத்தி அவர்களது தளவாடங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.

இந்த விபரங்களை அறிந்த மக்கார்த்தி பிரபுவும், ஆற்காட்டு நவாப்பும் என்னைக் காவலில் இருந்து விடுவித்து எனது பரம்பரை ஆட்சி உரிமையை எனக்கு வழங்கி என்னை மன்னராக ஆக்கினர். அத்துடன், இராமநாதபுரம் சீமையிலிருந்தும், சின்ன மறவன் சீமையிலிருந்தும், எதிரிகளை அடித்து விரட்டுமாறு கேட்டுக் கொண்டனர். மே 1781-ல் எனக்கு கும்பெனி வீரர்களது பாதுகாப்பு அளித்து திருச்சியிலிருந்து இராமநாதபுரம் திரும்புவதற்கு ஏற்பாடும் செய்தனர். வழியில் எதிரிகள் மிகுந்த பலத்துடன் என்னைத் தாக்கினர். நானும் அவர்களுடன் போராடி அவர்களைத் தோற்கடித்துவிட்டு இராமநாதபுரம் திரும்பினேன். தளபதி மார்ட்டின்ஸினுடைய நட்பைப் பெற்று மாப்பிள்ளைத் தேவனையும் சின்னமருது சேர்வைக்காரனையும் பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். மாப்பிள்ளை தேவன் பின்வாங்கி ஓடிவிட்டான். சின்னமருது சேர்வைக்காரன் சுல்லிவன் மூலமாக கும்பெனியாரின் நண்பனாகி விட்டான். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து துவங்கப்பட்டது. இப்பொழுது சென்னையிலுள்ள சாமித் தேவனுக்கு எனது சகோதரியை திருமணம் செய்து கொடுத்து சில கிராமங்களையும் ஜாகீர்களாக வழங்கினேன். சிலரது துாண்டுதலினால் என்மீது குற்றம் சுமத்துவதற்கு அவன் காத்திருக்கிறான்.

நான் இராமநாதபுரம் திரும்பிய சிறிது காலத்தில் முத்திருளப்பபிள்ளையை பிரதானியாக ஏற்றுக் கொள்ளுமாறு மார்ட்டின்ஸ் சிபாரிசு செய்தார். அவரது நட்பை மதித்து சீமையின் நிர்வாகப் பணிக்கு அவரை பிரதானியாக நியமித்தேன். எட்டு, ஒன்பது ஆண்டு காலப் பணியில் முத்திருளப்பபிள்ளை மார்ட்டின்சுடன் சேர்ந்து கொண்டு அரசியலுக்கு புதியவனான