பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
XII

 நியமிக்கப்பட்டதுடன், சேதுபதி மன்னரும் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே கி.பி. 1801-ல் காலமானார் (பக்கம் 251-52)' என்று கும்பெனியாரது சேவையில் இருந்த திரு. ராஜாராம்ராவ் என்பவர் வெள்ளை அரசுக்குப் பயந்த முறையில் வரைந்துள்ளார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மறவர்களைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் டாக்டர் எஸ். கதிர்வேல் அவர்கள், தமது ஆய்வுரையில், மறவர் சீமையின் மன்னரான இவர், ஆற்காட்டு நவாப், பிரிட்டிஷார் ஆகிய இருவரது ஆதிக்கத்தையும் புறக்கணித்தார். தன்னரசு நிலையை எய்துவதற்கு முயன்றார் (பக்கம் 185). பிப்ரவரி 1795-ல் கும்பெனிப் படைகள் மேஜர் ஸ்டீவென்ஸன் தலைமையில் இராமநாதபுரத்திற்குள் நுழைந்தன. சேதுபதி மன்னர் இதனை எதிர்பார்க்கவில்லை. அவரைப் பதவியில் இருந்து நீக்கி, திருச்சிக்கு அனுப்பிவிட்டு, கும்பெனியாரது ஆட்சியை அங்கு நிறுவினர் . (History of Marawas, Page 191, 1974) எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே பேராசிரியர் டாக்டர் கே. ராஜையனும் தமது “Rise and fall of the Polegars of Tamilnadu (1962) என்ற நூலில் எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளைத் தவிர இந்த மன்னரது புரட்சிப் போக்கைத் தெரிவிக்கும் நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசின் சென்னைப் பட்டின ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் கிழக்கிந்திய கும்பெனியாரது பலவகையான ஆவணத் தொகுப்புகளைப் படித்துப் பார்த்தபொழுதுதான், இந்த மன்னரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக அவரது எண்ணத்தில் இழையோடிய சுதந்திரப் போராட்ட சிந்தனைகள் அந்நிய ஆதிக்க எதிர்ப்புணர்வுகள், அவைகளைப் பிரதிபலிக்கும் நடவடிக்கைகள். மறவர் சீமை ஆதிக்கத்தைக் கைப்பற்ற பரங்கிகள் செய்த சதி, பகற்கொள்ளை-இவைகளைக் கண்டு கொதித்து எழுந்த விர மறவர்களது கிளர்ச்சி-ஆயுதப் போராட்டங்கள் போன்ற பல அரிய செய்திகளை அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.