1802-ம் ஆண்டு பிறந்தது.
மறவர் சீமையின் மகத்தான மக்கள் புரட்சி மூன்றாவது முறையாக வரலாற்றில் தோல்வி கண்டது. கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய மயிலப்பனையும் முத்துக்கருப்பத் தேவரையும் கைக்கூலிப் படைகள் தேடிப்பிடித்து கும்பெனியாரிடம் ஒப்படைத்தது. அவர்களது முயற்சிக்கான சம்மானத்தையும் பெற்றனர்.[1] தங்களை எதிர்ப்பதற்கு மாற்றாரே இல்லையென்னும் அளவில் மறவர் சீமையை அடிமைப்படுத்தி விட்ட மறவர்களது மகுடமான கோட்டைகளை ஆங்காங்கு இடித்துத்தள்ளினர். தங்களது உடன் பிறப்புகளாக உதவும் ஆயுதங்களையும் மறக்குடி மக்களிடமிருந்து கைப்பற்றினர்.[2] மீண்டும் தங்களுக்கு எதிராக இந்த மக்கள் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்ற அச்சமும் கவலையும் கும்பெனியாருக்கு இருந்தது. அடுத்து, அதுவரை இல்லாத அளவு, வறுமையிலும், வறட்சியிலும், நைந்து போன குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கிஸ்திப்பணம் வசூலித்தனர். கும்பெனியாரது நிர்வாகத்தில் மறவர் சீமையில் முந்தைய நான்கு ஆண்டுகளில் அவ்வளவு பணம்-அதாவது ரூ. 6,49,889 (1,85,285 ஸ்டார் பக்கோடாக்கள்)-வசூலிக்கப்படவில்லை.[3]
தமிழ்நாட்டின் வட எல்லையில் உள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ்கோட்டை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இடமாக இருந்து வந்தது. அங்கு வெடிகுண்டினால் கூட சேதமுறாத பிறைவட்ட அறை ஒன்றிற்கு இராமனாதபுர மன்னர்