பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

எஸ். எம். கமால்

செல்ல அனுமதி வழங்கினீர்கள். என்றாலும், தவறான சில ஆலோசனையினால் அவரது இறுதி வந்து எய்தியது. இறைவனது ஆணைக்கு யார் மாற்றம் செய்யமுடியும்?

தாங்கள் வழங்கிய அறிவுரை காரணமாக வெங்கிடாசலம் செட்டி, மன்னரது இழப்பிற்கு முன்னும் பின்னும் சில சடங்குகளை மிகவும் விரிவாகவும் ஆடம்பரமாகவும் நிறைவேற்றினார். எங்களது மன்னர் இராமநாதபுரத்தில் இறந்து இருந்தால் எவ்விதம் நடைபெற்று இருக்குமோ அந்த அளவில், அந்தச் செட்டியார் மன்னரது சடலத்தை மிகச்சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்து சென்னை நகர வீதிகளில் பவனி வருமாறு செய்தார். மிகுந்த மரியாதையுடன், எராளமான மக்கள் ஊர்வலமாக சுடுகாடு வரை சென்றனர். இவ்விதம் அவரது அந்திமச் சடங்குகள் சிறப்பாக நடைபெற்றன. அடுத்தநாள் அஸ்திமீது பால் தெளிக்கும் சடங்கும் மிகுந்த செலவில் வைதீக ஆசாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. அடுத்து மன்னரது இழப்பினால் மிக்க வேதனையுற்றவர்களாக தங்களையும் தங்களது அரசாங்கத்தையும் அனைத்து சென்னை நகர மக்களும் எதிர் நோக்கி உள்ளனர். ஏனென்றால், தாங்கள் இந்த நாட்டு பழக்க வழக்கங்களையும் நன்கு புரிந்தவர்கள்தானே !

நாங்கள் மேலே குறிப்பிட்ட வெங்கடாசலம் செட்டி அவர் களுக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இருந்து வருகிறோம். அவரிடத்தில் மன்னரது அஸ்தியைக் கொண்ட சம்புடம் இருந்து வருகிறது. ஆதலால், நாங்கள் தங்களை வேண்டிக்கொள்வது.

1) அந்த அஸ்திக் கலசத்தை, சிப்பாய்களது பாதுகாப்பில் இராமநாதபுரத்திற்கு அனுப்பிவைத்து, மேலும் நிறைவேற்றி வைக்க வேண்டிய சடங்குகளைச் செய்வதற்காக அதனை எங்களது எஜமானியான ராணி ராஜேஸ்வரி நாச்சியாரிடம் ஒப்படைக்குமாறு செய்யவேண்டியது.

2) மேலும், எங்களது எஜமானியின் பொறுப்பில் எங்களது ஜீவிய காலம் வரை, பராமரிப்பதற்காக எங்களுக்கு மாத உபகாரச் சம்பளம் நிகுதிசெய்து வழங்க வேண்டும். மற்றும்,