பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இணைப்பு 3


சில விளக்கக் குறிப்புகள்


சேதுபதி மன்னரது குடும்பம்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் அந்தப் பகுதியில் ஆட்சி செய்த மன்னர் குடும்பங்களை மாற்றாந்தாய் மக்களைப் போல நடத்தினர். அவர்களது இந்த மனிதாபிமானமற்ற போக்கிற்கு இராமனாதபுரம் மன்னரது குடும்பமும் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அல்ல. விடுதலை வேட்கையின் வடிவாக விளங்கிய இராமனாதபுரம் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னரது அரச வாழ்வை அழித்து, அவரது உடமைகளை தமதாக்கி, அவரை சிறையில் தள்ளியதுடன், அவரது குடும்பத்தினரும் அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணிருடன் ஊமைகளாகக் காலமெல்லாம், வறுமையிலும், வாழ்வின் சிறுமையிலும் நலிந்து அல்லலுமாறு செய்தனர்.

சென்னைக் கோட்டையில் சேதுபதி மன்னர் இறந்த செய்தி அறிந்து, அவரது முதல் மனைவி ராஜேஸ்வரி நாச்சியார், நமது கைம்மையை கருத்தில் கொண்டு இராமனாதபுரம் அரண்மனையில் தீக்குளிக்கத் தயாரானார். கொடுமையின் உருவாக இருந்த தளபதி மார்ட்டின்ஸின் கடிய மனதைக்கூட கரைத்தது. ராணியாரின் நிலை கிழக்கிந்திய கும்பெனி துரைத்தனத்தாரின் பிரதிநிதி என்ற முறையில், ராணியாரை நேரில் சந்தித்து அவரது முயற்சியைக் கைவிடுமாறு செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் மறைந்த மன்னரது குடும்பத்தினர் அனைவரும் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு வழி செய்வதாகவும் வாக்களித்தார். ஒன்பது மாதங்களுக்குத் தொடர்ந்து பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டது. மாதம் ஓராயிரம் ரூபாய்கள். ஆடம்பரமாக எல்ல வசதிகளுடன் வாழ்ந்த அந்தக் குடும்பத்தினர் - நான்கு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும், பணியாளர்களும்-அந்தத் தொகையில் தங்கள் வாழ்க்கையை சமாளித்து வந்தனர்.

ஆனால் கி.பி. 1809 அக்டோபர் முதல் அந்தத் தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது. பெண்பாலரான அவர்கள் அனை