பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

51


பாம்பாற்றுக் கரையின் தெற்கே உள்ள ஓரியூர் கோட்டை அருகே மறவர் சீமைப் படையும், தஞ்சை மராத்தியப் படையும் மோதின. பவானி சங்கரத் தேவர் சிறைப் பிடிக்கப்பட்டு தஞ்சைக்கு போர்க் கைதியாக அனுப்பப்பட்டார்[1] வெற்றிப் படைகள் இராமநாதபுரத்தை மீட்டதுடன் அரசுக் கட்டிலில் கட்டையத் தேவரை அமர்த்தி, முத்து விஜயரகுநாத சேதுபதி என மறவர் சீமையின் மன்னராக அறிவித்தது. தமது இக்கட்டான நிலையில் தம்முடன் தோளோடு தோள் சேர்த்து தமது முயற்சிக்கு பெருந்துணையாக நின்று போரிட்ட சசிவர்ணத் தேவரை சேதுபதி மன்னர் மறந்துவிடவில்லை. இராமனாதபுரம் சீமையை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, அவைகளில் இரண்டு பகுதியை சசிவர்ணத் தேவருக்கு சேதுபதி வழங்கினார். அதுமுதல் (கி. பி. 1730) மறவர்சீமை, இராமனாதபுரம் சீமை என்றும், சிவகங்கைச் சீமையென்றும் பெயர் பெற்றன. இந்தப்பிரிவினையை அமுல் நடத்திய சம்பிரிதி சசிவர்ணத்தேவர் மீது கொண்ட அக்கறை காரணமாக வைகை ஆற்றின் வளமிக்க பெரும்பகுதி சிவகங்கைப் பகுதியில் அடங்குமாறு எல்லையை நிர்ணயித்து விட்டார். இந்தத் தவறுதல் இரண்டு பகுதி ஆட்சியாளருக்கும் இடையில் மனக்கசப்பையும், தொல்லைகளையும் தோற்றுவிப்பதற்கு காரணமாக இருந்ததை பிற்கால வரலாறு காட்டுகிறது.[2]

சசிவர்ணத் தேவருக்குப் பின்னர், சிவகங்கை மன்னரான அவரது மகன் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் காளையார் கோவில் போரில் கும்பெனியாரது குண்டினால் 25-6-1772-ல் வீர மரணம் அடைந்தார். அவருடன் இருந்த அரசி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராயபிள்ளையும், ஆற்காட்டு நவாப்பிடம் சரணடைய விருப்பமில்லாமல் காளையார் கோவில் கோட்டையிலிருந்து தப்பித்து, மைசூர் அரசுப் பகுதியான விருபாட்சிக்கு விரைந்து சென்றனர். மைசூர் மன்னர் ஹைதாலி பகதூர் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கி ஆதரித்தார். அத்துடன் அவர்களுக்கு படை உதவி வழங்கு


  1. Rajuram Row, T., Ramnad Manual (1891), p. 239
  2. Hovonuo Sundries, Vol. 26, 6-10-1801