கட்டபொம்மன்
11
சேனா பலமெல்லாம் சிதறுண்டு போனாலும்
மானாபி மானம்மட்டும் மண்ணைவிட்டு நீங்கவில்லை!
ஆனாலும்-
கோட்டை இடிந்ததனால், கொத்தளங்கள் சாய்ந்ததனால்,
போட்டிருந்த திட்டமெல்லாம் பொடியாகிட்ட போனதனால்,
நாட்டைவிட்டு வெளியேறி நயவஞ்சக் காரர்தாம்
ஓட்டவழி பார்த்திருக்கும் உற்றதொரு வேளையிலே,
வேற்றுவார்தம் ஆட்சிக்கு வெற்றிலைகள் வைத்தழைத்து
சாற்றுக் கவிபாடிச் சலாமிட்ட பேர்வழிகள்,
ஆங்கிலர் தம் சூழ்ச்சிகளை ஆதரித்து அன்னவரைத்
தாங்கிப் பிடித்துமிகத் தரங்கெட்டுப் போனவர்கள்,
பெற்றெடுத்த தாயவளைப் பிறனொருவன் தொட்டிழுக்கச்
சற்றும் அதையெதிர்க்கும் தன்மையற்றுப் போனவர்கள்,
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவதுவே குலத்தைக் கெடுப்பதுபோல்
காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மன் பிடிபட்டான்!
வேட்டை கிடைத்ததென்று வெள்ளையரும் மனமகிழ்ந்தார்.
கட்டபொம்மன் பிடிபட்டான் என்னக் கேட்டுக்
- களிப்படைந்த கும்பினியான், ‘நாயை யேனும்
சுட்டுவிட வேண்டுமெனில், வெறிநாய் என்றே
- சொல்லிவிட்டுச் சுடவேண்டும்’ என்ற சொல்போல்,
திட்டமிட்டுச் சதிசெய்து, கட்ட பொம்மகன்
- செய்திட்ட குற்றங்கள் என்றே நீளப்
பட்டியலும் தயாரித்துக் கயத்தா றென்னும்
- பதியினிலே முகாமிட்டுப் பதிலும் கேட்டான்!