பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாத்தனார்

“அன்னம்மா! இந்த அதிசயத்தைக் கேட்டியா? என்னமோ எங்க வீட்டுக்காரி ரெண்டு மாசமா முழுகாம இருக்காளாம். அதுக்கு அவ பண்ணுற அட்டகாசத்தைப் பார்த்தா எனக்கு என்னமாத்தான் இருக்குது, தெரியுமா? தலையைச் சுத்தறதாம், மயக்கம் வரதாம், வாந்தி வரதாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்றா; ஏன்னா, வீட்டு வேலையைச் செய்வதற்கு நான் ஒருத்தி இருக்கிறேனோ இல்லையோ?” என்றாள் கங்கம்மா.

“என்னம்மோ அறியாதது! உன்னுடைய குழந்தை மாதிரி நினைச்சுக்கிட்டுப் போயேன்!” என்றாள் அன்னம்மா.

“போயும் போயும் நான் உங்கிட்டெ நியாயம் கேட்க வந்தேனே” என்று அவள்மேல் எரிந்து விழுந்துவிட்டு அடுத்த வீட்டு ஆண்டாளிடம் மேற்சொன்ன அநியாயத்தைத் தெரிவித்தாள் கங்கம்மா.

அவள் அதை கேட்டுவிட்டு “வீட்டு வேலைக்கு வேறே ஆளு இருந்தா, அவள் அப்படியா இருப்பா, இதுக்கு மேலேயும் இருப்பா! எல்லாம் அவனுங்க கொடுக்கிற செல்லம்!” என்று கங்கம்மாவுடன் ஒத்து ஊதினாள்.

கங்கம்மாவுக்குப் பொழுது விடிந்தால் இதே வேலை தான். அவளுக்குத் தன் தம்பி கந்தசாமியைப் பற்றியும், அவன் மனைவி வஞ்சியைப் பற்றியும் எவரிடமாவது ஏதாவது குறை சொல்லவில்லை என்றால் பொழுது போகாது. பட்டணத்தில் வாழ்ந்து வந்த அவள், தன்னுடைய கணவன் சண்டைக்குப் போய்விட்டதால் தம்பியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.

முதன் முதலில் அக்காளின் வருகையை அறிந்தபோது கந்தசாமி எவ்வளவோ சந்தோஷப்பட்டான். அக்கா வந்தால் வஞ்சிக்குத் துணையாக இருப்பாள் என்று அவள் நினைத்தான். தான் இருக்கும் நிலையில் அவள் வருவதைப் பற்றி வஞ்சிக்கும் முதலில் எவ்வளவோ சந்தோஷமாய்த் தானிருந்தது. அதெல்லாம் இப்பொழுது பகற் கனவாகி விட்டது. அவள் வந்ததன் பயனாகத் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்து வந்த தித்திப்பு, கசப்பாக மாறியதுதான் மிச்சம்!

* * *