பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறவினர் எதற்கு?

113

“சொல்வதைக் கேள் அம்மா!” என்று நான் வற்புறுத்தினேன்.

அவள் சொன்னாள்:

“அப்பா! நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஒன்று: பிரபலஸ்தர்களும் பிரமுகர்களும் ‘கலப்பு மணம்’ செய்தால், அவர்கள் சமூக முன்னேற்றத்திற்காகவும் சர்வ சமய சமரஸத்திற்காகவும் அப்படிச் செய்வதாக ஊரார் புகழ்வார்கள்; இது அவர்களுக்குச் சிறுமை யளிப்பதற்குப் பதிலாகப் பெருமையளிக்கும். ஆனால் நம்மைப் போன்ற ஏழைகள் செய்தாலோ? அப்படிப் புகழமாட்டார்கள். அப்பா! ‘கையாலாகாதவன் வேலை’ என்றும் ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்றும் இகழ்வார்கள் அப்பா!”

“அவர்கள் புகழ்ந்தாலும் புகழட்டும்; இகழ்ந்தாலும் இகழட்டும், அம்மா! அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எப்படியாவது நீ சுகமாயிருந்தால் அதுவே போதும் எனக்கு. வேண்டுமானால் நீ கலப்பு மணம் செய்து கொள்ள வேண்டாமே! அந்தப் பிள்ளையாண்டானும் பிறக்கும்போதே கிறிஸ்துவனாகப் பிறந்து விடவில்லையாம்; நடுவில்தான் மாறினானாம். அவனுடைய மதத்தை நாமும் தழுவி விடுவோமே நீதான் நேரில் பார்த்திருக்கிறாயே, உனக்கு அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ?”

அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை. “போங் கப்பா!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

அவ்வளவுதான்; அன்றே அவனுடைய சம்மதத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கடிதம் எழுதினேன். அவனும் சீர்திருத்த மனப்பான்மையோடு பதில் எழுதி யிருந்தான். அதாவது ‘பெண்ணுக்குச் சம்மதமாயிருந்தால் தனக்குச் சம்மதமே’ என்று தெரிவித்திருந்தான்.

அப்புறம் என்ன? ஜேம்ஸ் தாம்ஸன் ஒரு மாத லீவில் ஊருக்கு வந்தான். எல்லோருமாகக் கிளம்பி ஒருநாள் மாதா கோயிலுக்குச் சென்றோம். தன்னைச் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்தவர்களுக்காக ‘தந்தையே அவர்களை மன்னித்துவிடு; தாங்கள் இன்னது செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது!’ என்று இறைவனை வேண்டிக் கொண்ட ஏசுநாதரின் படம் எங்களை வரவேற்றது. பாதிரியார் எங்களை முறைப்படி மதம் மாற்றி வைத்தார்.

வி.க. -8