பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சொல்லேருழவராகிய இன்றைய தமிழ் எழுத்தாளரின் கவிதைகளையும் கதைகளையும் படித்தால் போதும். “திருவள்ளுவரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்தாத சமூக அமைப்பே நீ நிலைகுலைந்து அழியப் போகிறாயே!” என்று இரக்கம் பிறக்கிறது.

“விந்தன்” எய்யும் சொல்லம்புகள் குறிதவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில் தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி, பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்களும் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதே இல்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது; நாயோடு போட்டி போட்டுப் பிழைக்கும் சோலையப்பன், மாம்பழம் விற்று வயிறு வளர்க்கும் அம்மாயி, விளக்கெண்ணெய் வியாபாரம் செய்யாத நாடார் கடை மாணிக்கம் பிள்ளை - இவர்களுடைய மனங்கள் எல்லாம் அமைதியான நல்ல மனங்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாக மாறுகின்றன.

சில இடங்களில் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சமூகக் கேட்டுக்குக் காரணமானவர்களை வம்புக்கு இழுப்பதைப் பாருங்கள்.

தோதலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டவர்களைப்போல் “போடா, போ!” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.

அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது - சூரியனைக் கண்ட தாமரையைப்போல் அல்ல. சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவர் தம்முடைய காரியங்களையெல்லாம் முடித்துக் கொண்டு நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருப்பார்.

ஆசிரியரின் கதைகளில் கறவை மாடு குடும்பத்துக்குக் ‘கார்டியன்’ ஆகிறது; கிளி ‘கைது’ செய்யப்படுகிறது; குப்பைத் தொட்டிக்கும் வேலைக்காரியின் வயிற்றுக்கும் உள்ள வேற்றுமை மறைந்து போகிறது; சந்தர்ப்பங்களைத் தானே ஏற்படுத்திக் கொள்வதில் தமிழ் நாட்டு மாமியார் நெப்போலியனுக்கு நிகர் ஆகிறாள்; வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்வதை விடச் சாவதற்குப்