பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

விந்தன் கதைகள்

அதே சமயத்தில், வெளியே விளையாடிக் கொண்டிருந்த பட்டுவின் தம்பியான கிட்டு உள்ளே நுழைந்தான். அவன் சட்டையெல்லாம் ஒரே புழுதி மயமாக இருந்தது. அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவனுடைய காதைத் திருகியதன் மூலம் தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான் நாராயணமூர்த்தி.

பட்டுவும் கிட்டுவும் அழுதுகொண்டே வெளியே வந்து வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, "அக்கா, அம்மா உன்னை ஏன் அடிச்சா?" என்று கேட்டான் கிட்டு.

“ஒரு அப்பளத்தை எடுத்துத் தின்று விட்டேனாம், அதற்காக" என்றாள் பட்டு.

‘ஒஹோ..!” “ஆமாம்; உன்னை ஏன் அப்பா அடிச்சார்?" என்றாள் பட்டு. "சட்டையை அழுக்காக்கிக் கொண்டு வந்து விட்டேனாம், அதற்காக!" என்றான் கிட்டு.

பாவம், அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்த உண்மை அவ்வளவுதான்! ஆனால், அவர்கள் அறியாத-ஏன், அவர்களைப் பெற்றோரே அறியாத உண்மையொன்றும் இருக்கத் தான் இருந்தது.

அதுதான் இந்தப் பாரத புண்ணிய பூமி முழுவதும் பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் தரித்திரம்.

அதன் பயனாகத் தங்களுக்குள் ஒரு குற்றமும் இல்லா விட்டாலும், இன்று எத்தனையோ தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் இயற்கையாக நிலவக்கூடிய அமைதியைக் கூடக் குலைத்துக் கொள்ளவில்லையா?-அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நாராயணமூர்த்தியும் குமுதமும்.

* * *

ஆத்திரமெல்லாம் ஒருவாறு அடங்கியபிறகு, தன் மேல் பரிதாபமாக விழுந்து கிடந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தான் நாராயணமூர்த்தி. அது, அவனுடைய நண்பனான ஹரிகிருஷ்ணனிட மிருந்து வந்திருந்தது.

அவ்வளவுதான்; அவனுக்கு மீண்டும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.