பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

விந்தன் கதைகள்

அதற்குள் காப்பி வந்து சேர்ந்தது. அதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே, "என்ன, ஹரி இந்த ரேடியோவை எப்போது வாங்கினாய்?" என்று தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் ந்ாராயணமூர்த்தி.

"உம்...நானாவது, வாங்கவாவது சென்ற வாரம் இவளுடைய அப்பா இங்கே வந்திருந்தார். சாயந்திரமானால் பொழுது போவது சிரமமா யிருக்கிறது என்று அவரிடம் ஒரு வார்த்தை சொன்னேன். அதற்காக இந்த ரேடியோவை வாங்கி வைத்திருக்கிறார்!" என்றான் ஹரி பெருமையுடன்.

இதைக் கேட்டதும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலிருந்தது நாராயணமூர்த்திக்கு. ஆனாலும் அதை வெளியே 2 காட்டிக் கொள்ளாமல், வந்த காரியத்தை முடித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான்.

* * *

இந்தச்சம்பவம் நடந்த இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலையில் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நாராயணமூர்த்தி. "நகருங்க, நகருங்க!" என்ற கண்டக்டர்களின் ஓயாத ஒலத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சமயத்தில், திடுதிப் பென்று மோட்டார் சைக்கிளில் வந்து அவனுக்கு முன்னால் நின்ற ஹரிகிருஷ்ணன், “என்ன, நாராயணமூர்த்தி பஸ்ஸுக்காகவாகாத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அனுதாபத்துடன் கேட்டான்.

“ஆமாம்" என்று சொல்லக்கூட வாயடைத்துப்போய், அவனையும் அவன் ஏறி வந்த புத்தம்புது மோட்டார் சைக்கிளையும் ஏற இறங்கப் பார்த்தான் நாராயணமூர்த்தி.

“என்ன, பார்க்கிறாய்? உன்னைப் போல்தான் நானும் தினசரி இந்தப் பாழாய்ப்போன பஸ்ஸுக்காகக் காத்துக் காத்துப் பார்த்துப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் என் மாமனார்தான் இந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்து, என்னுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைத்தார்" என்றான் ஹரி.

“என்ன இருந்தாலும் நீ கொடுத்து வைத்தவன்தான்" என்றான் நாராயணமூர்த்தி தன்னையும் மீறி வந்த வயிற்றெரிச்சலுடன்.

அதைக் கவனிக்காத அப்பாவி ஹரி, "எங்கே போகப் போகிறாய் ஆபீஸுக்குத்தானே? பின்னால் ஏறிக் கொள்ளேன், கொண்டுபோய் விட்டு விடுகிறேன்" என்றான்.