பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கைமேல் பலன்

173

இதனால் அவர்களுடைய ஊதியமும் கொஞ்சம் உயர்ந்தது; உற்பத்தியும் பெருகிற்று.

மொத்த வியாபாரிகள் திணறிப் போகும்படியாகத் தீப்பெட்டிகளைக் கட்டுக் கட்டாக அனுப்பி வைத்தார் மன்னார்குடி மாணிக்கம். அவர்கள், "போதும், போதும்!" என்று அலறும் வரை அவர் நிறுத்தவேயில்லை.

அந்த மாதம் சம்பளம் வாங்கியதும் "செல்லம், நீ நாளையிலேருந்து அய்யர் வீட்டு வேலைக்குப் போக வேணாம்; என்னுடைய சம்பாத்தியமே போதும்" என்று சின்னப்பன் தன் மனைவியிடம் சொல்லி விட்டான். அதைக் கேட்டு அவளும் பூரித்துப் போனாள்.

இருந்தாலும் சின்னப்பனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு குறை இருக்கத்தான் இருந்தது. அதாவது, "இப்பொழுது நாம் இரவு ஒன்பதரை மணிவரை வேலை செய்வதால்தானே சம்பளம் கொஞ்சம் அதிகமாக் கிடைக்கிறது? அப்படிச் செய்யா விட்டால் பழைய சம்பளம்தானே கிடைக்கும்?" என்று எண்ணி அவர்கள் அதிருப்தியடைந்தார்கள். ஆனால் அந்த அதிருப்தியிலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை, "நாம் உற்பத்தியைப் பெருக்கினால் ஊதியம் தானாகவே உயரும்" என்பது தான.

இந்த நம்பிக்கையில் ஒரு வருஷம் எப்படியோ ஓடி விட்டது. அரையனாவுக்கு விற்ற தீப்பெட்டி முக்காலணாவாக உயர்ந்தது. இதனால்தானோ, அல்லது உற்பத்தியைப் பெருக்கியதினால்தானோ சுற்றுப்புறத்திலிருந்த தீப்பெட்டிப் பஞ்சம் தீர்ந்தது. மன்னார்குடி மாணிக்கம் இன்னும் கொஞ்சம் முன்னால் வந்த தம் தொந்தியை லேசாகத் தடவி விட்டுக் கொண்டார். ஆனால் சின்னப்பனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்த கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. அதாவது, அவர்கள் நினைத்தபடி சம்பளம் உயரவில்லை.

அதற்குப் பதிலாக, “நம்மிடம் தீப்பெட்டி ஸ்டாக் அதிகரித்து விட்டது. மொத்த வியாபாரிகளிடமிருந்து ஆர்டரும் வரவில்லை. அவர்களெல்லாம் விலையைக் குறைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தால் தேவலை என்று வேறு எழுதி வருகிறார்கள். எனவே, இனி உங்களுக்கு இரவில் வேலை கிடையாது; பகலில் மட்டுந்தான் வேலை" என்று மன்னார்குடி மாணிக்கம் அறிவித்து விட்டார்.