பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

விந்தன் கதைகள்

“என்னடி, அப்படிப் பறக்கிறே? அரிசி எடுத்துக் கொண்டு வர வேண்டாமா? "என்று சொல்லிக் கொண்டே நான் வெளியே வந்தேன்.

“ஐயோ! காத்தாலே பொறப்படறபோதே. அவரு சீக்கிரமா வான்னாரு நேரம் கழிச்சுப் போனா அவரு என்னை அடிச்சுக் கொன்னுப் பிடுவாரு அம்மா!"

"அது யாரடி, அவர்?"

"எம் புருஷன், அம்மா!"

"ஏன், அவன் எங்கேயாவது வேலை வெட்டிக்குப் போவதில்லையா?”

"சரித்தான்; அவரு எங்கேயாச்சும் வேலை வெட்டிக்குப் போவாம, வூட்டிலே சும்மாக் குந்திக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லையே! அடிக்கொரு தரம் எங்கேயாச்சும் திருடி விட்டு அவரு ஜெயிலுக்குப் போயிடுவாரு, ‘மவராசனுங்க அவரை எப்பவும் அப்படியே ஜெயில்லே வச்சிருக்க மாட்டானுங்களா'ன்னு எனக்குத் தோணும். ஏன்னா, அந்த மனுசன் வூட்டிலேயிருந்தா எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தோசமே கெடையாது. அவரு இல்லாதப் போதாவது இந்தக் கறிப்பிலை வித்துக் கெடைக்கும் அரிசியைக் கஞ்சி காய்ச்சி வயிறாரக் குடிப்பேன். அவரு இருந்தா எல்லா அரிசியையும் வித்துக் காசை அவருக்குச் சூதாடக் கொடுத்துடனும். இல்லாவிட்டால் அடிச்சுக் கொன்னுப்பிடுவாரு அதுவும் சீக்கிரம் சீக்கிரமா எல்லாத்தையும் அவருகிட்ட குடுத்துட்டு நானும் குழந்தையும் பட்டினி கெடக்க முடியுமா? அதாலே, அவருக்குத் தெரியாம இந்த முந்தானையிலே கொஞ்சம் அரிசி முடிஞ்சி வச்சுக்கிட்டுத்தான் நான் பாக்கியை விப்பேன். வித்த காசை அந்தக் கட்டையிலே போறவன் வருவான். கொடுத்துட்டு, கடவுளே'ன்னு குடிசைக்கு வருவேன். முந்தாணையில் முடிஞ்சஅரிசியை அவிழ்த்து எடுத்துக் கஞ்சி காய்ச்சி. நான் கொஞ்சம் குடிச்சிப்பிட்டு-இந்தக் கொழந்தைக்கும் ரெண்டு பாலாடை ஊத்திப்பிட்டு-அந்த மனுசனுக்கும் கொஞ்சம் எடுத்து வச்சிருப்பேன்....”

“அப்படிப்பட்டவனுக்கு நீ ஏண்டி அந்தக்கஞ்சியிலே கொஞ்சம் மீத்தி வைக்கிறே? எல்லாவற்றையும் குடித்து விட்டு, வெறும் பானையை அவனுக்கு முன்னால் உருட்டி விடுகிறதுதானே?”