பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

விந்தன் கதைகள்


பரபரப்புடன் அனந்தகிருஷ்ணனைத்துக்கி வண்டியில் உட்கார வைத்தாள்; பங்களாவை நோக்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றாள்.

குழந்தையைக் கூடக் கவனிக்காமல் தான்

எஜமான் முன்னால் வண்டியை நிறுத்தினாள். அவர் விரைந்து வந்து அனந்தகிருஷ்ணனைத் தூக்கித் தோளின் மேல் போட்டுக்கொண்டு "ஜாக்கிரதை இன்னொரு முறை இம்மாதிரி செய்தாலோ, வீட்டுக்குத்தான்!” என்று எச்சரித்தார்.

இந்தச் சம்பவத்தில், “அவள் செய்யவில்லை, அப்பா நானேதான் அவனை வண்டியில் உட்கார வைத்துத் தள்ளினேன். எனக்கு அப்படிச் செய்ய வேண்டுமென்று ஆசையாயிருந்தது, அப்பா!" என்றான் அனந்தன்.

"குழந்தை உனக்கென்ன தெரியும்? நீ செய்தால் அவள்பார்த்துக் கொண்டிருப்பதா?" என்று சொல்லிக் கொண்டே ராமேஸ்வரன் உள்ளே போய்விட்டார்.

விசாலம் திரும்பினாள். அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. அடிக்கும் கைதானே அணைக்கவும் வேண்டும் சாலையிலேயே நின்று அழுது கொண்டிருந்த குழந்தையை நோக்கி நடந்தாள். குழந்தையும் விக்கி விக்கி அழுது கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருவரும் சந்தித்தனர். ஐயோ! இரண்டு கன்னத்திலும் என்ன, அத்தனை பெரிய தழும்புகள்?

பார்த்த மாத்திரத்தில் விசாலத்தின் வயிறு 'பகீர்’ என்றது. குழந்தையை வாரி மார்புடன் அனைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

அடி பைத்தியக்காரி! உன்னை யார் அடிக்கச் சொன்னார்கள், அப்புறம் யார் அழச்சொன்னார்கள்?

* * *

ன்று ஏனோ தெரியவில்லை. வீட்டுக்கு வரும் போதே ஸ்ரீமான் ராமேஸ்வரன் ஒரு மாதிரியாக வந்தார். தேள் கொட்டிய திருடனின் வேதனை அவருடைய திவ்யவதனத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. "அடியே!" என்று மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே ஆயாசத்துடன் ஹாலிலேயே உட்கார்ந்துவிட்டார்.