மாதக் கடைசி; தேதி இருபத்து மூன்று; வெள்ளிக்கிழமை; மாலை நேரம்.
கணேசன் காரியாலயத்திலிருந்து மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சோர்வுக்குக் காரணம் வேறொன்றுமில்லை; இந்தியாவின் பொருளாதார நிலை திருப்திகரமா யிருப்பதுபோல், அவனுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக யில்லாமற் போனது தான்
அவனுடைய மனைவி மரகதம் அப்பொழுதுதான் கோயிலுக்குப் போவதற்காக வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தேங்காய் முதலியவற்றையெல்லாம் எடுத்துப் பூக்கூடையில் வைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாக எதையோ எடுத்து வைக்கப் போனவள், அது இல்லாமற் போகவே கணேசனிடம் ஓடோடியும் வந்து, ‘கற்பூரம் வீட்டில் இருக்கிறதாக்கும்னு நினைத்தேன் - இல்லை; ஒரு காலணா இருந்தால் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.
கணேசன் தன்னுடைய 'மணிபர்ஸை' எடுத்துத் திறந்து பார்த்தான். அதில் ஒரே ஒரு ஓட்டைக் காலணா இருந்தது. அந்தக் காலணாவுக்கும் அன்று வரை செலவு இல்லாமற் போகவில்லை; ‘மணிபர்ஸ் காலியாக இருக்கக் கூடாதே’ என்ற அசட்டு நம்பிக்கையின் காரணமாக அவன் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.
அந்தக் காலணாவைப் பெற்றுக் கொண்டதும் ‘ஒரே ஒரு காலணாதான் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது; அதற்கும் பகவான் பங்குக்கு வந்து விட்டார்’ என்றாள் மரகதம் சிரித்துக் கொண்டே.
'பங்குக்கு வந்துவிட்டாரா முழுக் காலணாவையும் அவரேயல்லவா அடித்துக் கொண்டு போகிறார்' என்றான்.கணேசன்.
அதற்குள் குழந்தை பானு கையில் பூக்கூடையுடன் அங்கே வந்து, ‘அம்மா! வா அம்மா!’ என்று மரகதத்தை அழைத்தாள்.
"அத்தை வரவில்லையா?” என்று கேட்டாள் மரகதம்.